இடுதுளை

முனைவர் வீ.செல்வகுமார்
உதவிப் பேராசிரியர்
கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

இடுதுளை என்பது பெருங்கற்கால ஈமச்சின்னங்களில் காணப்படும் துளையாகும். இதற்கு ஆங்கிலத்தில் “போர்ட் ஹோல்” (Porthole) என்று பெயர்.

இவை குறிப்பாக ஈமச்சின்ன வகைகளான கற்பதுக்கை (cist), பரல் உயர் பதுக்கை (dolmenoid cist) மற்றும் கல்திட்டை (Domen) ஆகியவற்றில் காணப்படும். கேரளாவில் காணப்படும் பெருங்கற்காலக் குடைவறைகளில் இந்தத் துளை மேல் நோக்கி அமைந்துள்ளது.

வடிவம்:
பெருங்கற்கால கற்பதுக்கையில்
காணப்படும் இரண்டு இடுதுளைகள்

இடுதுளை பொதுவாக வட்ட வடிவில் காணப்படும். இது சுமார் 20 முதல் 30 செமீ விட்டத்துடன் காணப்படுகின்றது. மேலும், நீள்வடிவ, டிரபீசிய மற்றும் சாவித் துவாரம் ஆகிய வடிவங்களிலும் இது அமைந்துள்ளது.

பயன்பாடு :

இந்தத் துளைகள் எதற்காக வைக்கப்பட்டுள்ளன என்பது தெரியவில்லை. ஆனால் இது பெருங்கற்கால மக்களின் நம்பிக்கையுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகின்றது. அக்கால மக்கள் ஆவியில் நம்பிக்கை உடையவர்களாக இருந்தமையால் இறந்தவர்களின் ஆவி ஈமச்சின்னங்களின் உள்ளே வந்து செல்வதற்காக அமைக்கபட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது. இவை பொருட்கள் இடுவதற்காகவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

திசை :

இடுதுளைகள் சில குறிப்பிட்ட திசைகளை நோக்கிக் காணப்படுகின்றன. சில இடங்களில் மேற்கு நோக்கியும், சில இடங்களில் வடக்கு நோக்கியும் அமைந்துள்ளன.

காணப்படும் இடம் :

ஈரோடு மாவட்டத்தில் கொடுமணல், புதுக்கோட்டையில் சித்தன்னவாசல் உள்பட பல் இடங்களில் உள்ள ஈமச்சின்னங்களில் இடுதுளைகள் காணப்படுகின்றன.