குன்னத்தூர்

முனைவர் வீ.செல்வகுமார்
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

குன்னத்தூர் பெருங்கற்கால / வரலாற்றுக் கால ஊராகும்.

அமைவிடம்

குன்றத்தூர் சென்னையிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு ஒரு குன்று உள்ளது. ஆகவே இவ்வூர் குன்னத்தூர் எனப் பெயர் பெற்றுள்ளது.

தொல்லியல் சான்றுகள்

இங்கு பெருங்கற்கால வாழ்விடமும் ஈமச் சின்னங்களும் காணப்படுகின்றன. இங்கு இந்திய அரசுத் தொல்லியல் ஆய்வுத் துறை அகழாய்வுகள் மேற்கொண்டுள்ளது (1955 – 58). இங்கு ஈமப் பேழைகளும், குழிகளும் ஈமச் சின்னங்களில் காணப்படுகின்றன. இவற்றைச் சுற்றிலும் கல்வட்டமும், சிலவற்றின் மேல் கல்மூடிகளும் காணப்படுகின்றன. இங்கு இரும்பிலான ஈட்டி முனை, கத்தி, குறுவாள் கோடரி, குதிரை இலாடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஓர் ஈமப் பேழையில் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஓர் ஈமப் பேழை 3 வரிசையில், வரிசைக்கு ஏழு கால்களாக 21 கால்களைப் பெற்றுள்ளது. ஒரு செம்புக் கிண்ணத்தில் நெல் கிடைத்துள்ளது. இங்கு திருவகத்தீஸ்வரம் என்ற சிவன் கோவில் உள்ளது. இங்குள்ள முருகன் கோவில் புகழ்பெற்றது. பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் இவ்வூரில் பிறந்தவராவார்.

மேற்கோள் நூல்

சு.இராசாவேலு, சோ.திருமூர்த்தி, 1995. தமிழ் நாட்டுத் தொல்லியல் ஆய்வுகள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை.