புலிமான் கோம்பை - சங்ககால நடுகற்கள் அமைவிடம்: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டத்தில் புலிமான்கோம்பை எனும் சிற்றூர் வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. இங்கு 2006ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழக கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையினர் மேற்கொண்ட கள ஆய்வில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்ககாலத் தமிழ் (தமிழி) எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மூன்று நடுகற்கள் கிடைத்துள்ளன. நடுகற்கள்: நடுகற்கள் என்பது ஊரைக் காக்கவோ நாட்டைக் காக்கவோ உயிரிழந்த வீரர்களுக்கு எடுக்கப்பெறும் நினைவுக் கற்களாகும். இது சங்ககாலம் தொட்டே வழக்கிலிருந்துள்ளது. இவை ஆங்கிலத்தில் ஹீரோ ஸ்டோன் (hero stone - வீரக்கல்) என்று அழைக்கப் பெறுகின்றன. சிறப்புகள் காலம் எழுத்தமைதியின் அடிப்படையில் இரு கல்வெட்டுக்களின் காலம் பொ.ஆ.மு. 4ஆம் நூற்றாண்டு எனவும் மற்றொரு கல்வெட்டின் காலம் பொ.ஆ.மு. 3ஆம் நூற்றாண்டெனவும் கணிக்கப்பெற்றுள்ளது. பின்வரும் மூன்று படங்களின் விளக்கம் எண் 1 செய்தி: கல்வெட்டு சிதைந்துள்ளதால் முழுமையான பொருளை அறிய முடியவில்லை எண் 2 செய்தி: வேள் ஊரைச் சேர்ந்த பதவன் அவ்வன் என்பவனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் எண் 3 செய்தி: கூடல் ஊரில் நடந்த ஆகோள் பூசலில் உயிர் நீத்த பேடுதீயன் அந்தவனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் |