வேணாட்டுச் சேரர் காசுகள் வேணாட்டுச் சேரர் காசுகள் (பொ.ஆ. 13-16 ஆம் நூற்றாண்டு): சேரர்களில் ஒரு பிரிவினர் பொ.ஆ. 13 ஆம் நூற்றாண்டு
வாக்கில் கன்னியாகுமரிப் பகுதியையும் சேர்த்தது வேணாடு என்ற பெயரில் ஆட்சி
நடத்தினர். இவர்கள் வேணாட்டு சேரர்கள் என அழைக்கப் பெற்றனர். இவர்களில் வீர
கேரளன், கோதை ரவி, உதயமார்த்தாண்டன் போன்ற அரசர்கள் நாகரி எழுத்துப்பொறித்த
காசுகளை வெளியிட்டனர். பொ.ஆ. 15,16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இராமராசா, பூதல
வீரராமன், சேரகுலராமன் போன்ற அரசர்கள் தமிழ் எழுத்துப்பொறித்த காசுகளை வெளியிட்டனர். எழுத்துப்பொறிப்புக் காசுகள்: ஸ்ரீ வீரகேரளஸ்ய, சரிகோதரஸ்ய, ஸ்ரீ கண்டராங்குஸ்ய, சரிகோதரவிஸய, சிரி உதயமார்த்தாண்டஸ்ய போன்ற எழுத்துப்பொறிப்புகள் நாகரியிலும் ஸ்ரீ உதயமார்த்தாண்ட, ஸ்ரீ பூதளவீரராமன், பூதல, பூதலவீரராமன், சேரகுலராமன், இராமாயிராசா போன்ற எழுத்துப்பொறிப்புகள் தமிழிலும் உள்ளன. எழுத்து மற்றும் மொழி: நாகரியையும் தமிழையும் பயன்படுத்தியுள்ளனர். கிடைத்துள்ள இடங்கள்: இக்காசுகள் தஞ்சாவூர், திருவனந்தபுரம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில் போன்ற இடங்களில் கிடைத்தாலும் மதுரை, திருவனந்தபுரம், திருநெல்வேலி ஆகிய ஊர்களில் அதிகளவில் கிடைக்கின்றன. உலோகம்: வெள்ளி, செம்பு ஆகிய இரு உலோகத்திலும் கிடைத்தாலும்
செம்பினாலானவை அதிகம் கிடைக்கின்றன. ஒரு சில செப்புக் காசுகளில் வெள்ளி முலாம்
பூசப்பெற்றுள்ளதாக ஆறுமுக சீதாராமன் குறிப்பிடுவது இங்கு நோக்கத்தக்கது. |