4.2 சங்ககாலத்தில் கால இடைநிலைகள்

    சங்ககாலத்தில் தோன்றிய எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய இலக்கியங்களில் நூற்றுக்கணக்கான வினைச்சொற்கள் இடம்பெறுகின்றன. அச்சொற்களின் துணை கொண்டு சங்ககாலத்தில் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்காலங்களைக் காட்டும் இடைநிலைகளாக எவை எவை வழங்கின என்பதை அறிந்து கொள்ளலாம்.

4.2.1 இறந்தகாலம்

    சங்க காலத்தில் தோன்றிய இலக்கியங்களில் -த்-, -த்த-, - ந்த்-, -ட்-, -ற்-, -இ-, -இன்-, -இய்-, -ய்- ஆகியன இறந்தகால இடைநிலைகளாக வழங்குகின்றன.

    சான்று:

-த்- தொழுதான் (கலித்தொகை, 55:19)
-த்த்- கொடுத்த (நற்றிணை, 110:11)
-ந்த்- வந்தனன் (நற்றிணை, 40:11)
-ட்- கண்டனம் (குறுந்தொகை, 275: 12)
-ற்- சென்றார் (அகநானூறு, 31:12)
-இ- இயலி (நடந்து) (நற்றிணை, 250:3)
-இன்- அஞ்சினன் (குறுந்தொகை, 302:6)
-இய்- பாடியோர் (புறநானூறு, 124:5)
-ய்- போய் (சென்று) (கலித்தொகை, 148: 23)

    மேற்கூறியவற்றுள் -த்த்-, -ந்த்- என்பன -த்- என்பதன் மாற்றுருபுகள் ஆகும். -ட்-, -ற்- என்பன -த்- என்பதன் திரிபுகள் ஆகும். -இன்-, -இய்-, -ய்- என்பன -இ- என்பதன் மாற்று வடிவங்கள் ஆகும். எனவே சங்க காலத்தில் -த்-, -இ- என்னும் இரண்டு மட்டுமே இறந்தகாலம் காட்டும் இடைநிலைகள் என்பது புலனாகிறது.

4.2.2 நிகழ்காலம்

    -கின்று-, -ஆநின்று-.

    சான்று:

-கின்று- ஆகின்று சேர்கின்ற (நற்றிணை, 227:9) (பரிபாடல், 22:35)
-ஆநின்று- வாராநின்றனள் (ஐங்குறுநூறு, 397:3)

4.2.3 எதிர்காலம்

    -ப்-, -ப்ப்-, -வ்-, -ம்-, -க்-, -த்-.

    சான்று:

-ப்- காண்பேன் (நற்றிணை, 259:8)
-ப்ப்- உரைப்பல் (உரைப்பேன்) (நற்றிணை, 100:7)
-வ்- செல்வாள் (ஐங்குறுநூறு, 234:4)
-ம்- கொய்யுமோன் (பறிப்போன்) (புறநானூறு, 252:3)
-க்- ஆற்றுகேன் (ஆற்றுவேன்) (கலித்தொகை, 140:14)
-த்- விடுதும் (விடுவோம்) (புறநானூறு, 9:5)

     தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.
வினைச்சொல் என்பது எதைக் குறிக்கிறது?
2.
வினைச்சொல்லின் உள்ளமைப்பு எந்த வரிசையில் அமைந்துள்ளது?
3.
சங்ககாலத்தில்     வழங்கிய     இறந்தகால இடைநிலைகளைச் சான்றுகளுடன் குறிப்பிடுக.
4.
சங்ககாலத்தில் வழங்கிய நிகழ்கால மற்றும் எதிர்கால இடைநிலைகளுக்கான சான்றுகள் தருக.