தன்மதிப்பீடு : விடைகள் - II

1) பாரதிதாசனின் மொழிப்பற்றைப் புலவர் எவ்வாறு காட்டுகிறார்?

தமிழ் மொழி இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தவரான பாரதிதாசனின் மொழிப்பற்றை எடுத்துக்காட்ட, சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த செய்தியைக் குறிப்பிடுவதுடன், திருவள்ளுவர் பற்றியும் திருக்குறள் பற்றியும் குறிப்பிடுகின்றார், புலவர்.

தரணிமிசை யாருக்கும் தன் தலை வணங்காத தமிழ் வேந்து - (66) என்றும்,

செந்தமிழ்க்குக் காவலனும் ஓர் அரிய பாவலனும் ஆனவன்
- (9)  என்றும்,

தமிழுக்கு அமுதென்று பேரென்று கொட்டுமொரு
சப்பாணி கொட்டியருளே

என்றும் தமிழோடிணைத்துப் பாடும் அழகைப் பல இடங்களில் காணலாம்.

சலியாத தமிழ்த் தொண்டினாற் சாதலற்றவன்
சப்பாணி கொட்டி யருளே
- (34)

என்று பாடுவது புரட்சிக் கவிஞரின்

“தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை
தமிழ்த் தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ”

என்ற கருத்தை அடியொற்றி எழுந்ததாகும்.