6.4 தொகுப்புரை

பாவலர்புலமைப்பித்தன், புதுமை உலகம் காணத் துடிக்கும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வாழ்க்கை வரலாற்றை, சிறந்ததொரு பிள்ளைத் தமிழ் இலக்கியமாகப் படைத்துள்ளார்.

பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக, பழைய மரபில் புதிய கருத்துகளைஎடுத்துரைக்கும் விதத்திலும், பாரதிதாசனின் தமிழ்ப் பற்றையும், சமுதாயப் பற்றையும், இலக்கியப் பணிகளையும் போற்றும் விதத்திலும் இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது. இந்நூலில் பாரதிதாசன் உள்ளத்தைக் கவர்ந்த பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் இவ்வாசிரியருடைய உள்ளத்தையும் கவர்ந்திருப்பதால் அது தொடர்பான கருத்துகளை எடுத்துரைக்கும் போது மனம் ஈடுபட்டுப் பாடக் காணலாம்.

அண்ணா என் மனக் கோயில் இறைவன் (81)

என்று பாடும் இவர், பாரதிதாசன் மேல் கொண்டிருக்கும் அளவு கடந்த பற்றும்,அன்பும் இந்நூலில் பல இடங்களில் எதிரொலிக்கக் காணலாம்.

பாவேந்தர் என் பாட்டுடைத் தலைவன்
- நெஞ்சில் ஏற்றி வைத்த தீபம்

செந்தமிழ் நறைக் கவிதை சிந்து - (12)

தென் பொதிகைச் சிகரத் தொளிரும் மணி விளக்கே
- (73)
தமிழ்த் தாயின் நிதியென எழுதி உவக்க
அமைத்த சுவைப்பாட்டில்
நிதமுமென் உயிரை மயக்க நினைத்த
கவிக்கோ
- (40)

என்றும் பாடக் காணலாம்.

‘பாவேந்தர் புகழைப் பாடும் தகவு இலாச் சிறிய கவிநான்’ (31) என்று பாவலர் புலமைப்பித்தன் அவையடக்கமாகக் குறிப்பிட்டாலும், பாரதிதாசனின் தமிழ்ப்பற்றையும், சமுதாய அக்கறையையும் சிறிதும் குறைவுபடாமல் எடுத்துரைக்கும் பாவேந்தர் பிள்ளைத் தமிழ் சிறந்ததோர் பிள்ளைத் தமிழ் இலக்கியம் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

தன்மதிப்பீடு : வினாக்கள் - II

1) பாரதிதாசனின் மொழிப்பற்றைப் புலவர் எவ்வாறு காட்டுகிறார்?
2) பாண்டியன் பரிசு - என்ற தலைப்பைக் கருத்தில் வைத்து,புலமைப்பித்தன்எவ்வாறு பாராட்டுகிறார்?
3) பிள்ளைத் தமிழ் நூலின் சந்தச் சிறப்புப் பற்றி எழுதுக.
4) பாரதிதாசனின் கவிதைத் திறன் பற்றிக் கூறுக.