3.3 பாத்திரப் படைப்பு

தனி மனிதப் பண்புகளையோ, அப்பண்புகளின் அடிப்படையில் அவர்கள் செய்யும் செயல்களையோ நாவல் தன் கதையில் பயன்படுத்திக் கொள்ளும். நாவலில் வருகின்ற தனித்தனி மனிதனின் பண்புகளையும், செயல்பாடுகளையும் நாவலாசிரியர் பாத்திரப் படைப்பு மூலம் வெளிக்கொண்டு வருகிறார். பாத்திரங்கள்தாம் கதையை நடத்திச் செல்லுகின்றன. பாத்திரங்களின் வாழ்க்கையை முழுமையாகவோ, அதில் சுவையான ஒரு பகுதியையோ விளக்கமாக எடுத்து உரைப்பதுதான் நாவலின் பணியாகும். ஆங்கிலத்தில் இதனை Characterization எனக் கூறுவர்.

நாவல் சிறப்பதற்கு நல்ல முறையில் பாத்திரங்கள் அமைய வேண்டும். கதையின் உயிரோட்டம் பாத்திரங்களே ஆகும். பாத்திரங்கள் மூலம்தான் நாவலாசிரியர் வாசகனைக் கவருகிறார். சில நேரங்களில் நாவலைப் படித்து முடித்ததும், சில பாத்திரங்களை விட்டுப் பிரிவது மனத்திற்குத் துன்பம் தரும் நிகழ்வாகக் கூட இருக்கும்.

கல்கியின் சிவகாமியின் சபதத்தில் வரும் சிவகாமி, தி.ஜானகிராமனின் மோகமுள்ளில் வரும் யமுனா, ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்களில் வரும் கங்கா போன்றவர்களை வாசகர்கள் மறக்க இயலாது.

பாத்திரத்தின் பண்பினை வாசகர்கள் அறிந்துகொள்ளப் படைப்பாளிகள் பயன்படுத்தும் உத்திகள் பலவாகும். அவற்றுள் சிலவாக ஆய்வாளர்கள் கூறுவன கீழ்க்கண்டவை ஆகும்.

(1) புறத்தோற்றம்
(2) அசைவு, நடை, நடத்தை, பழக்கம்
(3) பிற பாத்திரங்களுடன் கொள்ளும் உறவு
(4) பிறருடன் பேசும் உரையாடல்
(5) செயல்பாடுகளும், பிறருடன் நடந்து கொள்ளும் முறைகளும்
(6) பாத்திரத்தின் பெயர்

பாத்திரங்களின் பண்பினை நாவலாசிரியர் சில இடங்களில் தாமே வெளிப்படுத்துவார். சில இடங்களில் பாத்திரங்களின் பேச்சாலும் செயலாலும் வெளிப்படுத்தப்படும்.

கல்கியின் சிவகாமி, நரசிம்மவர்மனின் வாதாபிப் போருக்கே ஒரு காரணமாகவும், அவன் வெற்றிக்கு அடிப்படையாகவும் இருக்கிறாள். கல்கி, தாம் எழுதிய நாவல்களின் பாத்திரங்களில் சிலரின் மேல் பேரன்பு கொண்டிருந்தார் என்பதைச் சிவகாமி சபதம் முன்னுரையின் மூலம் நாம் அறியலாம்.

‘மகேந்திரரும், மாமல்லரும், ஆயனரும், சிவகாமியும், பரஞ்சோதியும், பார்த்திபனும், விக்ரமனும், குந்தவையும் மற்றும் பல கதா பாத்திரங்களும் என் நெஞ்சில் இருந்து கீழிறங்கி, ‘போய் வருகிறோம்’ என்று அருமையோடு சொல்லி விடை பெற்றுக் கொண்டு சென்றார்கள்.’

இதனைக் கொண்டு நாம் பார்க்கும் போது படைத்தவரான கல்கியாலேயே மறக்க முடியாத பாத்திரமாகச் சிவகாமி இருப்பதை உணரலாம்.

தி. ஜானகிராமனின் மோகமுள்ளில் வருகின்ற யமுனா தன்னை மணந்துகொள்ள வருகின்ற இளைஞர்கள் சாதியத்தாக்கத்தால் மறுத்துச் செல்கின்ற நேரத்திலும், அதனைப் பற்றிக் கொஞ்சமும் வருந்தாமல் சமூகத்தைக் கவனித்து வருகிறாள். பாபுவின் மீது அவளுக்குக் காதல் உண்டா, நட்பு மட்டும்தானா என்பது தொடக்கத்தில் புலப்படவில்லை. பாபு மட்டுமே அவள் மேல் ஒருதலையாகக் காதல் கொண்டுள்ளானா என்றும் அறிய முடியவில்லை. நாவலின் முடிவில் பாபுவிற்குத் தன்னை அர்ப்பணித்த பிறகு அவள் பாபுவை நோக்கி ஒரு வினா எழுப்புகிறாள்.

‘திருப்திதானே?’

இந்த வினா, யமுனாவின் பாத்திரப்படைப்பைப் பற்றிய மதிப்பை மிகவும் உயர்த்திவிடுகிறது. யமுனா மறக்க முடியாத பாத்திரமாகிறாள்.

அதே போல் சில நேரங்களில் சில மனிதர்களில் வரும் ‘கங்கா’ நாம் முன்னர்க் கண்டது போல் மறக்க இயலாப் பாத்திரமாகக் காட்சியளிக்கிறாள்.

நாவலில் இடம் பெறும் பாத்திரங்களின் வகைகளை மேலை நாட்டு ஆய்வாளர்கள் இருவகையாகப் பகுப்பர்.

(1)

வளர்ச்சி பெறாப் பாத்திரம் (Flat Character) அல்லது ஒரு நிலை மாந்தர்.

(2)

வளர்ச்சி பெறும் பாத்திரம் (Round Character) அல்லது முழுநிலை மாந்தர்.

 
  • வளர்ச்சி பெறாப் பாத்திரப்படைப்பு
  • வளர்ச்சி பெறாப் பாத்திரம் என்று மொழி பெயர்த்தாலும் ஒரு நிலை மாந்தர் என்றும் மொழி பெயர்ப்பர். நாவலின் தொடக்கத்தில் எந்த ஒரு பண்புடன் காணப்படுகிறாரோ, நாவல் முடியும் வரை அதே பண்போடு விளங்குபவரே ஒரு நிலை மாந்தராவர். இப்பாத்திரம் ஒரு கருத்து, அல்லது குணத்தைச் சுற்றி அமைக்கப்படும். நாவலாசிரியர் பாத்திரத்தின் ஒரு சில குணங்களைத் தேர்ந்தெடுத்து மற்றவற்றை விட்டுவிடுவர். அதனால் பாத்திரத்தின் பிற பண்புகள் விளக்கம் பெறுவதில்லை. இப்பாத்திரம் பற்றி நாவலாசிரியர் விளக்கி உரைக்காமலே இப்பாத்திரத்தின் பண்பினை வாசகர் உடனே விளங்கிக் கொள்வர். ஒரு நிலை மாந்தர், நாவல் முழுமையும் ஒரே குணத்தவராகக் காணப்படுவர். ரெனி வெல்லாக், ஆஸ்டின்வாரன் ஆகியோர் தம்முடைய இலக்கியக் கொள்கையில், ‘வளர்ச்சி பெறாப் பாத்திரப்படைப்பு, முதன்மையானதாகவோ, சமுதாய நிலையில் மிகத் தெளிவாகப் புலப்படும் நிலையிலோ அமைந்த தனிப் பண்பை வெளிப்படுத்துகிறது. அது ஒரு கேலிச் சித்திரமாகவோ, உயர்ந்த குறிக்கோள் நிலையுடையதாகவோ இருக்கலாம்’ என்று கூறுவர்.

    மு.வரதராசனாரின் கயமை எனும் நாவலில் வரும் வெங்கடேசன், எம்.வி.வெங்கட்ராமின் அரும்பு எனும் நாவலில் வரும் பசுபதி ஆகியோர் நாவல்களின் தொடக்கம் முதல் இறுதி வரை சுயநலமும், தீமை செய்வதும் குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். நாவல் முடிவு வரை ஒரே நிலையிலேயே வாழும் வளர்ச்சி பெறாப் பாத்திரங்களாக இவர்கள் படைக்கப்பட்டுள்ளனர்.

    சில திரைப்படங்களில் நகைச்சுவை நடிகர் ஒருவர் வருவார். அவர் படத்தில் எந்த இடத்தில் வந்தாலும் நகைச்சுவையாளராக மட்டுமே செயல்படுவார். அவரிடம் பிற பண்புகள் எதுவும் வெளிப்படாது. ஒருநிலை மாந்தரும் இப்படிப்பட்டவரே.

  • வளர்ச்சி பெறும் பாத்திரப் படைப்பு
  • இப்பாத்திரங்களை முழுநிலை மாந்தர் என்றே தமிழ் ஆய்வாளர்கள் மொழி பெயர்ப்பர். இப்பாத்திரங்கள் நாவலின் ஒவ்வொரு வளர்ச்சி நிலைக்கும் ஏற்றவண்ணம், தம் இயல்புகளில் தாமும் வளர்கின்றனர். இவர்களின் பண்புகள் தொடக்கத்தில் இருந்து கடைசி வரை மாறாமல் இருப்பதில்லை. வளர்ச்சியும் மாற்றமும் இவ்வகைப் பாத்திரங்களுக்கு உண்டு.

    இம் முழு நிலை மாந்தர் ஆழமான குறிக்கோள் கொண்டவர்களாக இருப்பர். வாசகன் தானும் அப்பாத்திரத்தைப் போலச் சிறப்புடைய மனிதனாக வாழ வேண்டும் என்ற சிந்தனையுடன் இருக்குமாறு இம் முழுநிலை மாந்தர்கள் செய்து விடுகின்றனர்.

    முழுநிலை மாந்தர் தம் வாழ்வுப் போக்கில் எத்தகைய மாற்றத்தையும் அடையலாம். தொடக்கத்தில் இருந்தது போலவே இருக்கக் கூடாது. வாழ்வில் ஒவ்வொரு சூழலிலும் முழுநிலை மாந்தர் வளர்நிலை அடைதல் வேண்டும். ஆனால் இந்த வளர்ச்சி அல்லது மாற்றம் பொருத்தமாக இருக்க வேண்டும். வேண்டுமென்றே செய்யப்பட்ட திடீர் மாற்றமாக இருக்கக் கூடாது. தவிர்க்க இயலாச் சூழலில் இம்மாற்றம் நிகழ்ந்ததாக அமைய வேண்டும்.

    எம்.வி.வெங்கட்ராமின் அரும்பு எனும் நாவலின் கதைத் தலைவி மஞ்சுளா. இவள் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தாலும் உயர்ந்த குணநலன்களும், அறிவுப் பூர்வமாகச் சிந்தித்து முடிவு எடுக்கும் தன்மைகளும் கொண்டவளாக விளங்குகிறாள். கதையின் வளர்ச்சிக்கேற்ப அவளின் நற்குணங்களும் அறிவும் வளர்ந்து கொண்டே செல்கின்றன. காதலித்த நீலகண்டனும் நட்புக்குரிய சரஸாவும் தன்னை ஏமாற்றிய போதும், உணர்வு நிலைக்கு ஆட்படாமல் அறிவு நிலையில் மென்மையாகப் பிரச்சனைகளை அணுகுகிறாள். இவள் வளர்ச்சி பெறும் பாத்திரத்திற்குச் சான்றாக அமைகிறாள்.



    தன் மதிப்பீடு : வினாக்கள் I

    1.
    கதையின் தொடக்கம் எவ்வாறு அமைய வேண்டும்?
    2.
    கதைப் பின்னலின் இருவகை யாவை?
    3.
    நெகிழ்ச்சிக் கதைப் பின்னல் என்றால் என்ன?
    4.
    செறிவான கதைப்பின்னலை விவரிக்க.
    5.
    பாத்திரப் படைப்பின் இருவகைகளை விவரிக்க.