முகப்பு

தொடக்கம்


டாக்டர் அ. நா. பெருமாள்,
இயக்குநர்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
   சென்னை113.

முன்னுரை

தொல்காப்பிய     நூல் உரைவள வெளியீட்டுத் திட்டத்தின் கீழ்
இதுவரை   18   நூல்கள்   உலகத்   தமிழாராய்ச்சி   நிறுவனத்தில்
வெளிவந்துள்ளன. ‘உரியியல்’ என்ற இத்தொகுதி 19 ஆவது உரைவள
நூலாக   வெளிவருகிறது.  இதனை  நல்லறிஞர்  ஆ.  சிவலிங்கனார்
சிறப்புறப் பதிப்பித்து விளக்க உரைகளுடன் தந்துள்ளார். அவருடைய
பணி பாராட்டுதற்குரியது.

இளம்பூரணர்,  சேனாவரையர், நச்சினார்க்கினியர் போன்ற பழைய
உரையாசிரியர்களின்    விளக்கத்துடன்    தற்கால   அறிஞர்களான
வெள்ளை  வாரணர், சுப்பிரமணிய சாஸ்திரியார், அ.கு.ஆதித்தர், தே.
ஆண்டியப்பன்,  தே.  ஆல்பர்ட்,  வை. தங்கமணி, சி. இலக்குவனார்
போன்ற  பலருடைய  விளக்கங்களையும்  இணைத்து மிகச் சிறப்பாக
இந்நூலைப்   பதிப்பாசிரியர்   உருவாக்கியுள்ளார்.  சில  இடங்களில்
தன்னுடைய   சிந்தனைக்   குறிப்புகளையும்   தந்துள்ளார்.  பெரும்
முயற்சியோடு  இந்த  உரைவளத்தை ஆக்கித் தந்த பதிப்பாசிரியரின்
முயற்சியை நிறுவனம் சிறப்பாக மதிக்கிறது.

நிறுவனப்     பணிகளுக்கு நல்ல ஆக்கமும், ஊக்கமும் தந்துதவும்
மாண்புமிகு  நிதியமைச்சர்,  டாக்டர்,  நாவலர், இரா. நெடுஞ்செழியன்
அவர்கட்கும்,   மாண்புமிகு   கல்வியமைச்சர்   சி.   பொன்னையன்
அவர்கட்கும்,  தமிழ்  வளர்ச்சி உயர்நிலைக்குழுத் தலைவர் சிலம்புச்
செல்வர்  டாக்டர்  ம.பொ. சிவஞானம் அவர்கட்கும், நிர்வாகக் குழுத்
தலைவர்  டாக்டர் வ.செ. குழந்தைசாமி அவர்கட்கும், தமிழ் வளர்ச்சி
பண்பாட்டுத்துறைச் செயலர் டாக்டர் அவ்வை நடராசன் அவர்கட்கும்,
உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் நிறைந்த நன்றியைச் செலுத்துகிறது.

நூலை அழகுற அச்சிட்டுதவிய ஸ்ரீ கோமதி அச்சக உரிமையாளர்
சி.   சரவணகுமார்   அவர்கட்கும்,  நூலைப்  பார்த்துக்  கருத்துரை
வழங்கிய அறிஞர் பெருமக்களுக்கும் நன்றி.

அ. நா. பெருமாள்
      
12-10-1987


முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்