xxii

யாப்பருங்கலக் காரிகை

 
அமிர்த சாகரனார் யாப்பருங்கலத்தை முதலிற் சூத்திர ரூபமாக இயற்றிய பிறகு,
அதற்கு அங்கமாகக் காரிகையை அவர் காலத்தில் சில மொழிகளில் வழங்கிவந்த
பல்வேறு நூல்களிலிருந்த சிறந்த அமிசங்களை எல்லாம் இந்நூலினுள்ளே ஒருங்கே
பெய்து அவை இந் நூலுக்கு அலங்காரமாக அமையும்படி இயற்றியருளினார் என்பது.
‘பாளித்திய மென்னும்..............காரிகையாப்பிற்றாய் யாப்பருங்கலம் என்னும் யாப்பிற்கு
அங்கமாய் அலங்கார முடைத்தாகச் செய்யப்பட்டமையின் யாப்பருங்கலக் காரிகை
என்னும் பெயர்த்து’ (கா. 1, உரை) என்பதனால் தெரிகின்றது.

இந் நூலாசிரியர் இயற்றிய உதாரண இலக்கிய முதனினைப்புக் காரிகைகள் 9, 11,
13, 15, 18, 20, 22-ஆகியவைகளே. பிற்பகுதியிற் காணப்படும் ஏனை உதாரண
முதனினைப்புக் காரிகைகள் உரையாசிரியர் இயற்றியவை. இதனை நோக்கும்போது இந்
நூலாசிரியர் காரிகை இலக்கணச் சூத்திரங்களை முதலில் முறையாக இயற்றி முடித்து,
அதன் பின்னர் ஆங்காங்குச் சேர்க்கவேண்டிய உதாரண இலக்கிய முதனினைப்புக்
காரிகைகளை இயற்றிச் சேர்த்திருத்தல் வேண்டும் என்பது போதரும். எஞ்சிய பகுதியை
எழுதுவதற்குள் இவர் காலகதி யடைந்தனரோ அன்றி யாதானும் ஓர் இடர்ப்பாட்டால்
எழுதாது விடுத்தனரோ என்று தோன்றுகிறது.

  * ‘நீகர வாதுநெஞ் சேதொழு வாழி நிகரில்பன்னூற்
காகர மாய்நின்ற வாதியன் னானருள் சேரமிர்த
சாகர மாமுனி தண்டா ரரசர்வண் டார்மகுட
சேகரஞ் சேரச் சிறைவண்டு சேருந் திருந்தடியே.’

என்றஇச் செய்யுள் பல சுவடிகளில் அமிர்தசாகரரின் வணக்க மாகக்
காணப்படுகிறது.

----

     * ஆகரம் - உறைவிடம். ஆதி அன்னான் - அருக பரன். வண் தார் மகுட
சேகரம் - வளவிய மாலையைச் சூடிய முடியையுடைய தலைகள். ‘நெஞ்சே சேகரஞ்
சேர வண்டு சேரும் அமிர்தசாகர மாமுனி திருந்தடி நீ கரவாது தொழு, வாழி எனக்
கூட்டி முடிக்க.