நூலாசிரியர் வரலாறு

xxi

 
என்று கொள்ள இடமேற்படுகிறது. காரிகை என்பது தமிழில் கட்டளைக் கலித்துறையைக்
குறிக்குமேனும் சூத்திரரூபமாக உள்ளவை பாவாலும் இனத்தாலும் அமையும்போது
அப்பாக்களையும் இனத்தையும் காரிகை என்பது வடநூன் முறைக்கு முரண்பாடன்று.
இப்பொருள் கொள்ளுமிடத்து இவ்வெண்பாச் சூத்திரங்களும் காரிகையாம். இந்த
வெண்பாச் சூத்திரங்கள் பெரும்பாலும் வடமொழி வழக்கினைக் கூறிச் செல்கின்றன.
இவற்றையெல்லாம் நோக்கும்போது, ‘ஆரியமென்னும் பாரிரும் பௌவத்தைக்
காரிகையாக்கித் தமிழ்ப்படுத்திய...... அமிர்த சாகரர்’ (பக். 3) என்ற தொடரிற்
காணப்படும் பகுதிக்கு ஒருவாறு பொருள் விளங்குதல் கூடும். இவ்வளவும் ஊகமே
ஒழியத் தீர்ந்த கருத்தன்று.
 
காரிகை நூலை இயற்றிய காரணத்தால் இவர் தொண்டை மண்டலத்தில் குளத்தூர்
என்ற இடத்தை மானியமாகப் பெற்றார் என்றும் அவ்வூர் ‘காரிகைக் குளத்தூர்’ என்று
வழங்கும் என்றும் சாஸனங்களால்* தெரியவருகிறது.
 
தாம் இயற்றிய காரிகையை அமிர்தசாகரர் பாண்டியனது அவைக்களத்தே
அரங்கேற்றினார் என்று சிலர் கருதுவர். அதற்கு அவர்கள் காட்டும் ஆதாரம். இந்நூல்
அவையடக்கத்துள் ‘தேனார் கமழ்தொங்கன் மீனவன்’ (கா. 2) என்ற காரிகையை,
‘மீனவன் கேட்ப யானா நடாத்துகின்றேன் என்று எனக்கே நகைதருமால்’ என
அந்வயித்து வலிந்து பொருள் கொள்ளுவதே யாகும். ‘மீனவன் கேட்ப அருந்தவன்
சொன்ன கன்னித்தமிழ் நூல்’ என்று ஆற்றொழுக்காக அமைந்த பொருளைக்
கொள்ளுவதே ஏற்புடைத்து. ‘அமுதசாகரன் நெடுந்தமிழ் தொகுத்த காரிகைக் குளத்தூர்’
என்றும். தண்டமிழமுதசாகர முனியைச் சயங்கொண்ட சோழ மண்டலத்துத் தண் சிறு
குன்ற நாட்டகத் திருத்தி........... நூற் காரிகை அவனாற் கண்டவன்’ என்றும்
சாஸனங்களிற் காணப்படும் பகுதிகளால். காரிகை இயற்றப்பட்ட இடம் தொண்டை
நாட்டில் உள்ளதென்று தெரிய வருகிறது.
 

     * EP. Ind. Vol. XVIII. PP. 64-69
      M. E. R. No. 534 of 1921