மேற்கண்ட இரு பிரதிகளையும் வைத்துக்கொண்டு இந்நூலைப்
பரிசோதித்துப் பதிப்பிக்கத் தொடங்கினேன். இப்பதிப்பில் இந் நூலின் மூல
பாடத்தையும் உரையையும் முன் பிரதியில் இருந்தபடியே வைத்துக்கொண்டு,
சூத்திரங்களையும் உரைகளையும் நோக்கி, ஒவ்வொரு சூத்திரத்திற்கும்
தலைப்பு எழுதி அந்த அந்தச் சூத்திரத்தின் முன்னே சேர்த்திருக்கின்றேன்.
வேண்டும் இடங்களிற் குறிப்புரைகள் எழுதி ஆங்காங்கு அடிக்குறிப்பில்
அமைத்திருக்கின்றேன். இந்நூலின் உரையிற் சில பிறழ்வுகள்
காணப்படுகின்றன. அவற்றை விளக்குதற்கு உரிய குறிப்புக்கள் எழுதி
ஆங்காங்கு அடிக்குறிப்பிற் சேர்த்திருக்கின்றேன். செய்யுள் இன்பம் கெடாத
வகையில் சூத்திரங்களின் சந்திகளைப் பிரித்திருக்கின்றேன். உரையினும்
கற்பார்க்கு உரை இனிது விளங்குதற்பொருட்டுச் சந்திகளைப்
பிரித்திருக்கின்றேன்.
இத்தமிழ்த் தொண்டை எனக்கு அளித்த சைவ சித்தாந்த
நூற்பதிப்புக் கழகத்தார்க்கு என் அன்போடு கூடிய நன்றியைச்
செலுத்துகின்றேன்.
இதிற் காணப்படும் பிழைகளுக்காக என்னை மன்னிக்க
என
அறிஞர்களை வேண்டுகின்றேன்.
எனது இம்முயற்சியை இடையூறு இன்றி இனிது முடியத்
திருவருள்
புரிந்த திருமகள் நாதன் திருவடித் தாமரைகளை வழுத்தி வாழ்த்துகின்றேன்.
|