xviii

துணைகொண்டு திருத்திக் கொண்டதாகக் கொள்ளலாம். இவற்றை சாமிகவிராயர் ஏனைய நூல்களைத் தழுவிக் கொண்டதற்குரிய காரணமாகக் கொள்ளலாம்.

5. 1. 1. சுவாமிநாதமும் தொல்காப்பியமும்

தொல்காப்பியத்தில் கூறப்பட்ட சில கருத்துக்கள் - பிற நூல்களில் ஏற்றுக்கொள்ளப்படாமல் விடப்பட்டுள்ள சில கருத்துக்கள் சுவாமிநாதத்தில் தழுவிக்கொள்ளப்பட்டுள்ளன. அதாவது தொல்காப்பியத்தில் கூறப்பட்ட கருத்துக்கள் மீண்டும் சுவாமிநாதத்தில் மட்டுமே பேசப்பட்டுள்ளன.

இடைச்சொல்லின் ஒரு சிறப்புப்பண்பாகத் தொல்காப்பியர் ‘தம்மீறு திரிதல்’ (தொல் - சொல். 251-3) (இடைச்சொற்களின் ஈறு மாற்றுவடிவம் பெற்று வருதலை அதாவது மன் என்ற இடைச்சொல் மன்னை என்று ஈறு திரிந்து வருதல்) என்று விதந்து கூறியுள்ளார். இக்கருத்து சுவாமிநாதத்தில் ‘ஒருபொழுது சில ஈறு திரிந்தும் வரும்’ (54.3) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சொல்லதிகாரத்தில் கிளவியாக்கத்திலும் இத்தகைய ஒரு செய்தி காணப்படுகிறது.

இனத்தைச் சுட்டாத பெயரோடு வரும் பெயரடை இனத்தைச் சுட்டாது வருதல் செய்யுளுக்கே உரிய வழக்காக தொல்காப்பியர் குறிப்பிடுவார்.

இனச் சுட்டில்லாப் பண்புகொள் பெயர்க் கொடை
வழக்காறல்ல செய்யுளாறே (தொல். சொல் 18)

ஆனால் நன்னூல் வெளிப்படையாகவும் இலக்கண விளக்கம் குறிப்பாகவும் இத்தகைய தொடர்கள் செய்யுளுக்கும் வழக்குக்கும் உரியதாகப் பேசும்.