xxix

  உருபின் மயக்கமோர் உருபின் பொருளொடு
தன்பொருள் விடுத்துத் தலைமயங்குதலே. (இ. வி. 219)

என்ற சூத்திரங்கள் சுவாமிநாதத்தோடு தொடர்பற்றுக் காணப்படுகின்றன. ஆனால் இலக்கண விளக்கம் 220 ஆம் சூத்திர உரையில் காணப்படும்.

‘பொருள் மயக்கம் தன் பொருளில் தீராது மயங்குதலின் உருபு ஏற்ற சொல்லும் உருபு நோக்கிய சொல்லும் தம்முள் இயைபு உடையனவாம் ஆகலின் அத் தொடர்ப் பொருள் அவ்வேற்றுமை உருபின் பொருளாவான் சேறலான் அதனைச் சார்ந்து அதன் பொருளாம் என்பதூஉம் உருபு மயக்கம் தன்பொருளில் தீர்ந்து மயங்குதலின் உருபு ஏற்ற சொல்லும் உருபு நோக்கிய சொல்லும் தம்முள் இயைபு உடையனவல்லவாம் ஆதலின்......’ என்ற உரைப் பகுதியே ஆதாரம் என்பது தெளிவு.

வினையெச்ச வாய்பாடு கூறும் சூத்திர உரையில் (சூத். 246, பக். 307) ‘இன்னும் அதனானே விருந்தியின்றி பகலும் எனவரும் இன்றியும்....அன்றியும் .... ஏலும்........ வினையெச்சக் குறிப்புக்களாம் எனக் கொள்க, என்ற விதப்புக் கிளவியை ஒட்டியே சுவாமிநாதம் (53) அவற்றையும் வினையெச்ச விகுதிகளாகப் பேசியுள்ளது.

5. 1. 6. இலக்கணக்கொத்தும் சுவாமிநாதமும்

இலக்கணக்கொத்தே சொல்லதிகாரத்திற்குச் சிறப்பிடம் கொடுத்து ஆராய்ந்துள்ளது. அதனால் சுவாமிநாதம் சொல்லதிகாரத்தில் இலக்கணக்கொத்தைத் தழுவிக்கொண்டுள்ளது. ஆயினும் சுவாமிநாததேசிகர் கூறிய எழுத்ததிகாரக் கருத்துக்களில் சிலவற்றையும் ஏற்றுக்கொண்டுள்ளது. புதிய கருத்துக்கள், கூறுமுறை ஆகிய இரண்டு வகையில் இலக்கணக்கொத்தின் செல்வாக்கை சுவாமிநாதத்தில் காணலாம்.