நம்பிகுட்டுவன்

109. நெய்தல்
முட் கால் இறவின் முடங்கு புறப் பெருங் கிளை
புணரி இகுதிரை தரூஉம் துறைவன்
புணரிய இருந்த ஞான்றும்,
இன்னது மன்னோ, நல் நுதற் கவினே!

உரை

தலைவன் சிறைப்புறமாக, தலைவி வேறுபாடுகண்ட புறத்தார் அலர் கூறுகின்றமை தோன்ற, தோழி தலைமகட்குக் கூறுவாளாய்க் கூறியது. - நம்பி குட்டுவன்

243. நெய்தல்
மான் அடி அன்ன கவட்டிலை அடும்பின்
தார் மணி அன்ன ஒண் பூக் கொழுதி,
ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும்
புள் இமிழ் பெருங் கடற் சேர்ப்பனை
உள்ளேன்-தோழி!-படீஇயர், என் கண்ணே.

உரை

வன்புறை எதிர் அழிந்து சொல்லியது. - நம்பி குட்டுவன்