முண்டகம்

49. நெய்தல்
அணிற் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து
மணிக் கேழ் அன்ன மா நீர்ச் சேர்ப்ப!
இம்மை மாறி மறுமை ஆயினும்.
நீ ஆகியர் எம் கணவனை;
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே.

உரை

தலைமகன் பரத்தைமாட்டுப் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள் அவனைக் கண்ட வழி அவ்வாற்றாமை நீங்குமன்றே; நீங்கியவழி, பள்ளியிடத்தானாகிய தலைமகற்குச் சொல்லியது. - அம்மூவனார்

51. நெய்தல்
கூன் முள் முண்டகக் கூர்ம் பனி மா மலர்
நூல் அறு முத்தின் காலொடு பாறித்
துறைதொறும் பரக்கும் தூ மணற் சேர்ப்பனை
யானும் காதலென்; யாயும் நனி வெய்யள்;
எந்தையும் கொடீஇயர்வேண்டும்;
அம்பல் ஊரும் அவனொடு மொழிமே.

உரை

வரைவு நீட்டித்தவிடத்து ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி வரைவு மலிவுகூறியது - குன்றியனார்