இந்நூல்,
பரிபாடல் என்னும் பாவால் தொகுக்கப்
பெற்றமையின் இப்பெயர்பெற்றது ;
பரிபாட்டெனவும் வழங்கும்; இதனை, எண்வகை
வனப்பினுள் இழைபென்பர் பேராசிரியர் (தொல்.
செய். சூ. 242). பரிபாடலாவது 1இசைப்பாவென்றும்
2பரிந்து வருவதென்றும் கூறப்படும்; பரிந்து
வருவது - ஏற்றுவருவது.
அறம்
பொருள் இன்பம் வீடென்னும் உறுதிப்பொருள்
நான்கனுள் இன்பத்தையே பொருளாகக்கொண்டு
கடவுள் வாழ்த்து, மலை விளையாட்டு,
புனல்விளையாட்டு முதலியவற்றில் இப்பாடல்
வருமென்பர் பேராசிரியர் (தொல். செய். சூ. 121);
தெய்வவாழ்த்து உட்படக் காமப்பொருள்குறித்து
உலகியலே பற்றிவருமென்பர்
நச்சினார்க்கினியர் (தொல். அகத். சூ. 53) ;
தெய்வமும் காமமும் பொருளாக வருமென்பர்
யாப்பருங்கல விருத்தியுடையார் முதலியோர்.
தொல்காப்பியச்
செய்யுளியலிலுள்ள, "நெடுவெண்பாட்டே",
"பரிபா டல்லே", "கொச்சக மராகம்",
"சொற்சீரடியும்", "கட்டுரைவகையான்",
"உருட்டுவண்ணம்" என்னும் சூத்திரங்கள்
முதலியவற்றாலும் அவற்றின் உரைகளாலும்
பரிபாடலின் இலக்கணம் நன்கு விளங்கும் ;
"பரிபாட்டெல்லை" என்னும் சூத்திரம்,
இப்பாடல்களின் சிற்றெல்லை 25-அடி யென்றும்
பேரெல்லை 400-அடி யென்றும் தெரிவிக்கின்றது.
"அன்பினைந்திணை"
(இறை. சூ. 1) என்பதனுரையிலும்,
"தரவின்றாகி" (தொல். செய். சூ. 149)
என்பதனுரையிலும் 150கலியும் 70பரிபாடலும் என
வரையறை
1.
இப்புத்தகம் 5-ஆம் பக்கத்துள்ள ‘பரிபாட்டென்பது
இசைப்பாவாதலான்' என்பது முதலியவற்றையும்,
'கலியும் பரிபாடலும்போலும் இசைப்பாட்டாகிய
செந்துறைமார்க்கத்தன' (தொல். செய். சூ. 242,
பேர்.) என்பதையும் நோக்குக.
2.
'பரிந்தபாட்டு பரிபாட்டெனவரும்; அஃதாவது
ஒருவெண்பாவாகி வருதலின்றிப் பலஉறுப்புக்களோடு
தொடர்ந்து ஒரு பாட்டாகி முற்றுப்பெறுவது' (தொல்.
செய். சூ. 112, இளம்.); பரிபாடலென்பது பரிந்து
வருவது ; அஃதாவது கலியுறுப்புப் போலாது பல வடிவும்
ஏற்று வருவது (தொல். செய். சூ. 118 பேர்.);
பரிபாடலென்பது பரிந்து வருவது; அது
கலியுறுப்புப்போலாது நான்கு பாவானும் வந்து பல
அடியும் வருமாறு நிற்குமென்றுணர்க' (தொல்.
செய். சூ. 118, ந.).
|