இரண்டாம் பதிப்பின் முகவுரை

"எண்ணிய வெண்ணியாங் கெய்துப கண்ணுதற்
பவள மால்வரை பயந்த
கவள யானையின் கழல்பணி வோரே"
(பழைய பாடல்)

"ஆவியந் தென்றல் வெற்பி னகத்தியன் விரும்புந் தென்பால்
நாவலந் தீவம் போற்றி நாவலந் தீவந் தன்னுள்
மூவர்கட் கரியா னிற்ப முத்தமிழ்ச் சங்கத் தெய்வப்
பாவலர் வீற்றி ருக்கும் பாண்டிநன் னாடு போற்றி"

(திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்)

ரிபாடலென்பது கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்த நல்லிசைப் புலவர்கள் அருளிச்செய்த 1எட்டுத்தொகையுள் ஐந்தாவது ; சொற்சுவை பொருட்சுவைகளிற் சிறந்து பொருள்களின் இயற்கையழகுகளை நன்குதெரிவிப்பது ; மதுரை, வையையாறு, திருமருதந்துறை, திருப்பரங்குன்றம், திருமாலிருஞ்சோலைமலை என்பவற்றின் பண்டைக்கால நிலைமைகளையும் அக்கால நாகரிக முறையையும் வைதிக ஒழுக்கங்களையும் தெய்வவழிபாட்டுமுறையையும் பிறவழக்கங்களையும் தமிழ்நாட்டின் வரலாறுகள் சிலவற்றையும் செவ்வனே தெரிந்துகொள்ளுதற்குக் கருவியாக உள்ளது ; பதினோராம் பாடலின் முதலிற் கூறப்பெற்றுள்ள கோள்களின் நிலைமை கடைச்சங்கத்தார் காலத்தை ஒருவகையாகப் புலப்படுத்தும். "நற்றிணை நல்ல" என்னும் வெண்பாவில், 'ஓங்கு பரிபாடல்' என்று பாராட்டப் பெற்றிருத்தலால் இந்நூலின் உயர்வு நன்கு விளங்கும்.


1. எட்டுத்தொகை இன்னவையென்பதை,

"நற்றிணை நல்ல குறுந்தொகை யைங்குறுநூ,
றொத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல்,
கற்றறிந்தார் சொல்லுங் கலியோ டகம்புறமென்,
றித்திறத்த வெட்டுத்தொகை"

என்னும் வெண்பாவால் உணர்க; இவை எண்பெருந்தொகை யெனவும், எண்கோவை யெனவும் வழங்கும்.