இசைவகுத்தோர்
வரலாறு
1. கண்ணகனார்
:- இவர் 21-ஆம் பாடலுக்கு இசைவகுத்தவர்; புறநானூற்றிலுள்ள
218-ஆம் செய்யுள் இயற்றியவரும் நற்றிணையில்
79-ஆம் செய்யுளியற்றியவரும் இவரே. இதனால், இவர்
இயற்றமிழிலும் வல்லுநரென்று தெரிகின்றது.
2. கண்ணனாகனார்:-
இவர் 5-ஆம் பாடலுக்கு இசைவகுத்தவர்.
3. கேசவனார்:-
14-ஆம் பாடலுக்கு இசை வகுத்தவர்; பிறவரலாற்றைப்
பாடினோர் வரிசையிற் காண்க.
4. நந்நாகனார்:-
இவர் 12-ஆம் பாடலுக்கு இசை வகுத்தவர். நப்பண்ணனாரென்பதிற்போல
'ந' என்பது சிறப்புப் பொருளையுணர்த்தும்.
5. நல்லச்சுதனார்:-
இவர் 16, 17, 18, 20-ஆம் பாடல்களுக்கு இசைவகுத்தவர்; பிறவரலாற்றைப்
பாடினோர் வரிசையிற் காண்க.
6. நன்னாகனார்:-
இவர் 2-ஆம் பாட்டிற்கு இசைவகுத்தவர். புறநானூற்று ஆசிரியர்களுள்
புறத்திணை நன்னாகனாரென ஒருவர் உளர்; அவரும்
இவரும் ஒருவரோ வேறோ தெரியவில்லை.
7. நாகனார்:-
இவர் 11-ஆம் பாடலுக்கு இசை வகுத்தவர்.
8. பித்தாமத்தர்:-
இவர் 7-ஆம் பாடலுக்கு இசைவகுத்தவர். இப்பெயர்
பித்தாமக்கரென்றும் காணப்படுகின்றது.
9. பெட்டனாகனார்:-
3, 4-ஆம் பாடலுக்கு இசைவகுத்தவர் இவர்.
10.
மருத்துவனல்லச்சுதனார்:- இவர் 6, 8, 9, 10, 15, 19-ஆம்
பாடல்களுக்கு இசை வகுத்தவர். 'மருத்துவன்' என்ற சிறப்புப்
பெயர் இவர் மருத்துவநூலிலும் வல்லவரென்பதைக் காட்டுகின்றது.
|