இ-மகன்:- இகல்வேந்தன் சேனை இறுத்தவாய் போல
         அகலல்குல்தோள் கண்என மூவழிப் பெருகி
         நுதலடி நுசுப்பென மூவழிச் சிறுகிக்
         கவலையாற் காமனும் படைவிடு வனப்பினோடு
         அகலாங்கண் அளைமாறி அலமந்து பெயருங்கால்
         நகைவல்லேன் யானென்றென் உயிரோடு படைதொட்ட
         இகலாட்டி நின்னை எவன்பிழைத்தேன்? எல்லா யான்;

இ-மகள்:- அஃதவலம் அன்று மன்!
         ஆயர் எமரானால் ஆய்த்தியேம் யாம்மிகக்
         காயாம்பூங் கண்ணிக் கருந்துவர் ஆடையை
         மேயும் நிரைமுன்னர்க் கோலூன்றி நின்றாயோர்
         ஆயனை யல்லை பிறவோ அமரருள்
         ஞாயிற்றுப் புத்தேள் மகன்?

இ-மகன்:- அதனான் வாய்வாளேன்!
         முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன
         பல்லும் பணைத்தோளும் பேரமர் உண்கண்ணும்
         நல்லேன்யான் என்று நலத்தகை நம்பிய
         சொல்லாட்டி நின்னொடு சொல்லாற்று கிற்பார்யார்?

இ-மகள்:- சொல்லாதி?

இ-மகன்:- நின்னைத் தகைத்தனேன்.

இ-மகள்:- அல்லல்காண் மன்!
         மண்டாத கூறி மழகுழக் காகின்றே
         கண்ட பொழுதே கடவரைப் போலநீ
         பண்டம் வினாய படிற்றால் தொடீஇயநின்
         கொண்டது எவன்?

இ-மகன்:- கொண்டது
         அளைமாறிப் பெயர்தருவாய் அறிதியோ அஞ்ஞான்று
         தளவமலர் ததைந்ததோர் கானச்சிற் றாற்றயல்
         இளமாங்காய் போழ்ந்தன்ன கண்ணினால் என்னெஞ்சம்
         களமாக் கொண் டாண்டாயோர் கள்வியை யல்லையோ?

இ-மகள்:- நின்னெஞ்சம்.
         களமாக்கொண் டியாம் ஆளல் எமக்கெவன் எளிதாகும்?
         புனத்துளான் எந்தைக்குப் புகாவுய்த்துக் கொடுப்பதோ?
         இனத்துளான் என்னைக்குக் கலத்தொடு செல்வதோ?
         தினைக்காலுள் யாய்விட்ட கன்றுமேய்க் கிற்பதோ?