பதிப்புரை

நம் தண்டமிழ் மொழிக்கண் சங்கமருவிய துங்கநூல்களுள்,
எட்டுத்தொகைக்கண்,ஐந்தாவதாக 'ஓங்கு பரிபாடல்' என உயர்ந்தோரால்
உயர்த்திக் கூறப்படுவது, பரிபாடல்எனப் பெயரிய இந்நூல்.

இது, தமிழ்மொழிக்கே சிறப்புரிமையாகப் பெற்ற அகப்பொருள்,
புறப்பொருள்ஆகிய இருபொருள்களையும் தழுவிப் புலமைச் சான்றோரால்
ஆக்கப்பட்ட செவ்விய நூலாகும். இந்நூல் முழுமுதற் கடவுளராகிய
திருமாலையும், செவ்வேளாகிய முருகப்பெருமானையும், உலகுபுரந்தூட்டும்
உயரிய ஒழுகலாற்றைக்கொண்ட வையைப் பேரியாற்றையும்
வாழ்த்துதலாக உட்பொருள்கொண்டு, இடையிடையே நம் தமிழகப் பண்பு
அன்பு காதல் வீரம் அறம் காவிய ஓவியத் திறங்களை விளக்கிச்
செல்லும் பெருமை மிக்கது. அதனால் நம் தமிழ்மாநிலத்துச் சிதைந்தன
போக எஞ்சிய பாடல்களேனும் உருவுடன் இன்று காறும் நம்மிடையே
நின்று நிலவுகின்றன.

இத்தகைய அருமைபெருமை மிக்க நூலைப் பல்லிடங்களினும்
சென்றுசென்று துருவித் தேடிக்கொணர்ந்து நூலுருவாக ஆக்கித்
தமிழ்கூறு நல்லுலக மக்கள் தமிழ்ப் பரிபாடலைக் கூட்டுண்ண உதவிய
பெருமை, டாக்டர், உயர்திரு. உ. வே. சாமிநாதையரவர்கட்கே உரித்து,
அவர்கட்குத் தமிழுலகு என்றும் நன்றிகூறும் கடப்பாடுடையது.

பரிபாடலாம் இந்நூலுக்கு முன்னரே பரிமேலழகர் உரையுளது.
அவ்வுரை, இடையிடையே சிதைந்தும் எழுத்துருவங்கள் நன்கு
தெரியாவாறு பிறழ்ந்தும் உளது. நூலிலும் பல்லிடங்களில் அவ்வாறே
உள்ளன. இந்நூல், 'திருமாற் கிருநான்கு' என்று தொடங்கும் பழைய
வெண்பா வொன்றினால் எழுபது பாடல்களைக்கொண்டது என்பது
தெளிவாகின்றது. கறையானும் செல்லும் மண்ணும் உண்டு.
சுவைத்தனபோக எச்சமாக இன்றிருப்பன இருபத்திரண்டு பாடல்களும்,
தொல்