அருவி தாழ்ந்த பெரு வரை போல

198
'அருவி தாழ்ந்த பெரு வரை போல
ஆரமொடு பொலிந்த மார்பில் தண்டா,
கடவுள் சான்ற கற்பின், சேயிழை
மடவோள் பயந்த மணி மருள் அவ் வாய்க்
5
கிண்கிணிப் புதல்வர் பொலிக!' என்று ஏத்தி,
திண் தேர் அண்ணல் நிற் பாராட்டி,
காதல் பெருமையின் கனவினும் அரற்றும் என்
காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப,
ஆல் அமர் கடவுள் அன்ன நின் செல்வம்,
10
வேல் கெழு குருசில்! கண்டேன்; ஆதலின்,
விடுத்தனென்; வாழ்க, நின் கண்ணி! தொடுத்த
தண் தமிழ் வரைப்பகம் கொண்டி ஆக,
பனித்துக் கூட்டு உண்ணும் தணிப்பு அருங் கடுந் திறல்
நின் ஓரன்ன நின் புதல்வர், என்றும்,
15
ஒன்னார் வாட அருங் கலம் தந்து, நும்
பொன்னுடை நெடு நகர் நிறைய வைத்த நின்
முன்னோர் போல்க, இவர் பெருங் கண்ணோட்டம்!
யாண்டும் நாளும் பெருகி, ஈண்டு திரைப்
பெருங் கடல் நீரினும், அக் கடல் மணலினும்,
20
நீண்டு உயர் வானத்து உறையினும், நன்றும்,
இவர் பெறும் புதல்வர்க் காண்தொறும், நீயும்,
புகன்ற செல்வமொடு புகழ் இனிது விளங்கி,
நீடு வாழிய! நெடுந்தகை! யானும்
கேள் இல் சேஎய் நாட்டின், எந்நாளும்,
25
துளி நசைப் புள்ளின் நின் அளி நசைக்கு இரங்கி, நின்
அடி நிழல் பழகிய அடியுறை;
கடுமான் மாற! மறவாதீமே.

திணையும் துறையும் அவை.
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை வடம வண்ணக்கன் பேரி சாத்தனார் பாடியது.