இருங் கடல் உடுத்த

363
இருங் கடல் உடுத்த இப் பெருங் கண் மா நிலம்
உடையிலை நடுவணது இடை பிறர்க்கு இன்றி,
தாமே ஆண்ட ஏமம் காவலர்
இடு திரை மணலினும் பலரே; சுடு பிணக்
5
காடு பதி ஆகப் போகி, தம்தம்
நாடு பிறர் கொளச் சென்று மாய்ந்தனரே;
அதனால், நீயும் கேண்மதி அத்தை! வீயாது
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை;
மடங்கல் உண்மை மாயமோ அன்றே;
10
கள்ளி வேய்ந்த முள்ளிஅம் புறங்காட்டு,
வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்,
உப்பு இலாஅ அவிப் புழுக்கல்
கைக்கொண்டு, பிறக்கு நோக்காது,
இழி பிறப்பினோன் ஈயப் பெற்று,
15
நிலம் கலனாக, இலங்கு பலி மிசையும்
இன்னா வைகல் வாராமுன்னே,
செய் நீ முன்னிய வினையே,
முந்நீர் வரைப்பகம் முழுது உடன் துறந்தே.

திணையும் துறையும் அவை.
...................... ஐயாதிச் சிறுவெண்டேரையார் பாடியது.