வாழும் நாளோடு யாண்டு

159
'வாழும் நாளோடு யாண்டு பல உண்மையின்,
தீர்தல் செல்லாது, என் உயிர்' எனப் பல புலந்து,
கோல் காலாகக் குறும் பல ஒதுங்கி,
நூல் விரித்தன்ன கதுப்பினள், கண் துயின்று,
5
முன்றில் போகா முதிர்வினள் யாயும்;
பசந்த மேனியொடு படர் அட வருந்தி,
மருங்கில் கொண்ட பல் குறுமாக்கள்
பிசைந்து தின, வாடிய முலையள், பெரிது அழிந்து,
குப்பைக் கீரை கொய்கண் அகைத்த
10
முற்றா இளந் தளிர் கொய்துகொண்டு, உப்பு இன்று,
நீர் உலைஆக ஏற்றி, மோர் இன்று,
அவிழ்ப் பதம் மறந்து, பாசடகு மிசைந்து,
மாசொடு குறைந்த உடுக்கையள், அறம் பழியா,
துவ்வாளாகிய என் வெய்யோளும்;
15
என்றாங்கு, இருவர் நெஞ்சமும் உவப்ப கானவர்
கரி புனம் மயக்கிய அகன்கண் கொல்லை,
ஐவனம் வித்தி, மையுறக் கவினி,
ஈனல்செல்லா ஏனற்கு இழுமெனக்
கருவி வானம் தலைஇ யாங்கும்,
20
ஈத்த நின் புகழ் ஏத்தி, தொக்க என்,
பசி தினத் திரங்கிய, ஒக்கலும் உவப்ப
உயர்ந்து ஏந்து மருப்பின் கொல்களிறு பெறினும்,
தவிர்ந்து விடு பரிசில் கொள்ளலென்; உவந்து, நீ
இன்புற விடுதிஆயின், சிறிது
25
குன்றியும் கொள்வல், கூர் வேல் குமண!
அதற்பட அருளல் வேண்டுவல் விறல் புகழ்
வசை இல் விழுத் திணைப் பிறந்த
இசை மேந் தோன்றல்! நிற் பாடிய யானே.

திணை அது; துறை பரிசில் கடா நிலை.
அவனை அவர் பாடியது.