கடுங் கண்ண கொல்

14
கடுங் கண்ண கொல் களிற்றால்
காப்பு உடைய எழு முருக்கி,
பொன் இயல் புனை தோட்டியால்
முன்பு துரந்து, சமம் தாங்கவும்;
5
பார் உடைத்த குண்டு அகழி
நீர் அழுவ நிவப்புக் குறித்து,
நிமிர் பரிய மா தாங்கவும்;
ஆவம் சேர்ந்த புறத்தை தேர் மிசைச்
சாப நோன் ஞாண் வடுக் கொள வழங்கவும்;
10
பரிசிலர்க்கு அருங் கலம் நல்கவும்; குரிசில்!
வலிய ஆகும், நின் தாள் தோய் தடக் கை.
புலவு நாற்றத்த பைந் தடி
பூ நாற்றத்த புகை கொளீஇ, ஊன் துவை
கறி சோறு உண்டு வருந்து தொழில் அல்லது,
15
பிறிது தொழில் அறியா ஆகலின், நன்றும்
மெல்லிய பெரும! தாமே. நல்லவர்க்கு
ஆர் அணங்கு ஆகிய மார்பின், பொருநர்க்கு
இரு நிலத்து அன்ன நோன்மை,
செரு மிகு சேஎய்! நிற் பாடுநர் கையே.

திணை அது; துறை இயன்மொழி.
சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் கபிலர் கைப் பற்றி, 'மெல்லியவாமால் நூம்கை' என, கபிலர் பாடியது.