கல் அறுத்து இயற்றிய

331
கல் அறுத்து இயற்றிய வல் உவர்க் கூவல்,
வில் ஏர் வாழ்க்கை, சீறூர் மதவலி
நனி நல்கூர்ந்தனன்ஆயினும், பனி மிக,
புல்லென் மாலைச் சிறு தீ ஞெலியும்
5
கல்லா இடையன் போல, குறிப்பின்
இல்லது படைக்கவும் வல்லன்; உள்ளது
தவச் சிறிது ஆயினும் மிகப் பலர் என்னாள்,
நீள் நெடும் பந்தர் ஊண் முறை ஊட்டும்
இல் பொலி மகடூஉப் போல, சிற் சில
10
வரிசையின் அளிக்கவும் வல்லன்; உரிதினின்
காவல் மன்னர் கடைமுகத்து உகுக்கும்
போகு பலி வெண் சோறு போலத்
தூவவும் வல்லன், அவன் தூவுங்காலே.

திணையும் துறையும் அவை.
உறையூர் முது கூத்தனார் பாடியது.