சிறப்புடை மரபின்

31
சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல,
இரு குடை பின்பட ஓங்கிய ஒரு குடை,
உரு கெழு மதியின், நிவந்து, சேண் விளங்க,
5
நல் இசை வேட்டம் வேண்டி, வெல் போர்ப்
பாசறை அல்லது நீ ஒல்லாயே;
நுதிமுகம் மழுங்க மண்டி, ஒன்னார்
கடி மதில் பாயும் நின் களிறு அடங்கலவே;
'போர்' எனின், புகலும் புனை கழல் மறவர்,
10
'காடு இடைக் கிடந்த நாடு நனி சேஎய;
செல்வேம் அல்லேம்' என்னார்; 'கல்லென்
விழவுடை ஆங்கண் வேற்றுப் புலத்து இறுத்து,
குண கடல் பின்னது ஆக, குட கடல்
வெண் தலைப் புணரி நின் மான் குளம்பு அலைப்ப,
15
வல முறை வருதலும் உண்டு' என்று அலமந்து,
நெஞ்சு நடுங்கு அவலம் பாய,
துஞ்சாக் கண்ண, வட புலத்து அரசே.

திணை வாகை; துறை அரச வாகை; மழபுலவஞ்சியும் ஆம்.
அவனைக் கோவூர் கிழார் பாடியது.