நஞ்சுடை வால் எயிற்று

37
நஞ்சுடை வால் எயிற்று, ஐந் தலை சுமந்த,
வேக வெந் திறல், நாகம் புக்கென,
விசும்பு தீப் பிறப்பத் திருகி, பசுங் கொடிப்
பெரு மலை விடரகத்து உரும் எறிந்தாங்கு,
5
புள் உறு புன்கண் தீர்த்த, வெள் வேல்,
சினம் கெழு தானை, செம்பியன் மருக!
கராஅம் கலித்த குண்டு கண் அகழி,
இடம் கருங் குட்டத்து உடன் தொக்கு ஓடி,
யாமம் கொள்பவர் சுடர் நிழல் கதூஉம்
10
கடு முரண் முதலைய நெடு நீர் இலஞ்சி,
செம்பு உறழ் புரிசை, செம்மல் மூதூர்,
வம்பு அணி யானை வேந்து அகத்து உண்மையின்,
'நல்ல' என்னாது, சிதைத்தல்
வல்லையால், நெடுந்தகை! செருவத்தானே.

திணை வாகை; துறை அரசவாகை; முதல் வஞ்சியும் ஆம்.
அவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.