நன்று ஆய்ந்த நீள்

166
நன்று ஆய்ந்த நீள் நிமிர் சடை
முது முதல்வன் வாய் போகாது,
ஒன்று புரிந்த ஈர் இரண்டின்,
ஆறு உணர்ந்த ஒரு முது நூல்
5
இகல் கண்டோர் மிகல் சாய்மார்,
மெய் அன்ன பொய் உணர்ந்து,
பொய் ஓராது மெய் கொளீஇ,
மூ ஏழ் துறையும் முட்டு இன்று போகிய
உரைசால் சிறப்பின் உரவோர் மருக!
10
வினைக்கு வேண்டி நீ பூண்ட
புலப் புல்வாய்க் கலைப் பச்சை
சுவல் பூண் ஞாண்மிசைப் பொலிய;
மறம் கடிந்த அருங் கற்பின்,
அறம் புகழ்ந்த வலை சூடி,
15
சிறு நுதல், பேர் அகல் அல்குல்,
சில சொல்லின், பல கூந்தல், நின்
நிலைக்கு ஒத்த நின் துணைத் துணைவியர்
தமக்கு அமைந்த தொழில் கேட்ப;
காடு என்றா நாடு என்று ஆங்கு
20
ஈர் ஏழின் இடம் முட்டாது,
நீர் நாண நெய் வழங்கியும்,
எண் நாணப் பல வேட்டும்,
மண் நாணப் புகழ் பரப்பியும்,
அருங் கடிப் பெருங் காலை,
25
விருந்துற்ற நின் திருந்து ஏந்து நிலை,
என்றும், காண்கதில் அம்ம, யாமே! குடாஅது
பொன் படு நெடு வரைப் புயலேறு சிலைப்பின்,
பூ விரி புது நீர்க் காவிரி புரக்கும்
தண் புனல் படப்பை எம் ஊர் ஆங்கண்,
30
உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம்;
செல்வல் அத்தை, யானே; செல்லாது,
மழை அண்ணாப்ப நீடிய நெடு வரைக்
கழை வளர் இமயம் போல,
நிலீஇயர் அத்தை, நீ நிலம்மிசையானே?

திணை வாகை; துறை பார்ப்பன வாகை.
சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயனை ஆவூர் மூலங்கிழார் பாடியது.