நீயே, புறவின் அல்லல்

46
நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை,
இவரே, புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சி,
தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர்;
5
களிறு கண்டு அழூஉம் அழாஅல் மறந்த
புன் தலைச் சிறாஅர்; மன்று மருண்டு நோக்கி,
விருந்தின் புன்கண் நோவுடையர்;
கேட்டனைஆயின், நீ வேட்டது செய்ம்மே!

திணையும் துறையும் அவை.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானைக்கு இடுவுழி, கோவூர் கிழார் பாடி, உய்யக் கொண்டது.