நும் படை செல்லும்காலை

169
நும் படை செல்லும்காலை, அவர் படை
எடுத்து எறி தானை முன்னரை எனாஅ,
அவர் படை வரூஉம்காலை, நும் படைக்
கூழை தாங்கிய, அகல் யாற்றுக்
5
குன்று விலங்கு சிறையின் நின்றனை எனாஅ,
அரிதால், பெரும! நின் செவ்வி என்றும்;
பெரிதால் அத்தை, என் கடும்பினது இடும்பை;
இன்னே விடுமதி பரிசில்! வென் வேல்
இளம் பல் கோசர் விளங்கு படை கன்மார்,
10
இகலினர் எறிந்த அகல் இலை முருக்கின்
பெரு மரக் கம்பம் போல,
பொருநர்க்கு உலையா நின் வலன் வாழியவே!

திணை அது; துறை பரிசில் கடா நிலை.
அவனைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.