பாறுபடப் பறைந்த பல் மாறு

359
பாறுபடப் பறைந்த பல் மாறு மருங்கின்,
வேறு படு குரல வெவ் வாய்க் கூகையொடு,
பிணம் தின் குறு நரி நிணம் திகழ் பல்ல,
பேஎய் மகளிர் பிணம் தழூஉப் பற்றி,
5
விளர் ஊன் தின்ற வெம் புலால் மெய்யர்,
களரி மருங்கின் கால் பெயர்த்து ஆடி,
ஈம விளக்கின் வெருவரப் பேரும்
காடு முன்னினரே, நாடு கொண்டோரும்;
நினக்கும் வருதல் வைகல் அற்றே;
10
வசையும் நிற்கும்; இசையும் நிற்கும்;
அதனால், வசை நீக்கி இசை வேண்டியும்,
நசை வேண்டாது நன்று மொழிந்தும்,
நிலவுக் கோட்டுப் பல களிற்றொடு,
பொலம் படைய மா மயங்கிட,
15
இழை கிளர் நெடுந் தேர் இரவலர்க்கு அருகாது,
'கொள்' என விடுவை ஆயின், வெள்ளென,
ஆண்டு நீ பெயர்ந்த பின்னும்,
ஈண்டு நீடு விளங்கும், நீ எய்திய புகழே.

திணை அது; துறை பெருங்காஞ்சி.
அந்துவன் கீரனைக் காவட்டனார் பாடியது.