'யாண்டு பல ஆக'

191
'யாண்டு பல ஆக, நரை இல ஆகுதல்
யாங்கு ஆகியர்?' என வினவுதிர் ஆயின்,
மாண்ட என் மனைவியொடு, மக்களும் நிரம்பினர்;
யான் கண்டனையர் என் இளையரும்; வேந்தனும்
5
அல்லவை செய்யான், காக்கும்; அதன்தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர், யான் வாழும் ஊரே.

திணையும் துறையும் அவை.
கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தானுழைச் சென்ற பிசிராந்தையாரை,'கேட்கும் காலம் பலவாலோ? நரை நுமக்கு இல்லையாலோ?' என்ற சான்றோர்க்கு அவர் சொற்றது.