யாழ்ப் பத்தர்ப் புறம் கடுப்ப

136
யாழ்ப் பத்தர்ப் புறம் கடுப்ப
இழை வலந்த பல் துன்னத்து
இடைப் புரை பற்றி, பிணி விடாஅ
ஈர்க் குழாத்தோடு இறை கூர்ந்த
5
பேஎன் பகை என ஒன்று என்கோ?
உண்ணாமையின் ஊன் வாடி,
தெண் நீரின் கண் மல்கி,
கசிவுற்ற என் பல் கிளையொடு
பசி அலைக்கும் பகை ஒன்று என்கோ?
10
அன்ன தன்மையும் அறிந்து ஈயார்,
'நின்னது தா' என, நிலை தளர,
மரம் பிறங்கிய நளிச் சிலம்பில்,
குரங்கு அன்ன புன் குறுங் கூளியர்
பரந்து அலைக்கும் பகை ஒன்று என்கோ?
15
'ஆஅங்கு, எனைப் பகையும் அறியுநன் ஆய்'
எனக் கருதி, பெயர் ஏத்தி,
வாய் ஆர நின் இசை நம்பி,
சுடர் சுட்ட சுரத்து ஏறி,
இவண் வந்த பெரு நசையேம்;
20
'எமக்கு ஈவோர் பிறர்க்கு ஈவோர்;
பிறர்க்கு ஈவோர் தமக்கு ஈப' என,
அனைத்து உரைத்தனன் யான் ஆக,
நினக்கு ஒத்தது நீ நாடி,
நல்கினை விடுமதி, பரிசில்! அல்கலும்,
25
தண் புனல் வாயில் துறையூர் முன்துறை
நுண் பல மணலினும் ஏத்தி,
உண்குவம், பெரும! நீ நல்கிய வளனே.

திணை அது; துறை பரிசில் கடாநிலை.
அவனைத் துறையூர் ஓடைகிழார் பாடியது.