வடாஅது பனி படு

6
வடாஅது பனி படு நெடு வரை வடக்கும்,
தெனாஅது உரு கெழு குமரியின் தெற்கும்,
குணாஅது கரை பொரு தொடு கடற் குணக்கும்,
குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும்,
5
கீழது முப் புணர் அடுக்கிய முறை முதற் கட்டின்
நீர் நிலை நிவப்பின் கீழும், மேலது
ஆனிலை உலகத்தானும், ஆனாது,
உருவும் புகழும் ஆகி, விரி சீர்த்
தெரி கோல் ஞமன் போல, ஒரு திறம்
10
பற்றல் இலியரோ! நின் திறம் சிறக்க!
செய் வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்து,
கடல் படை குளிப்ப மண்டி, அடர் புகர்ச்
சிறு கண் யானை செவ்விதின் ஏவி,
பாசவல் படப்பை ஆர் எயில் பல தந்து,
15
அவ் எயில் கொண்ட செய்வுறு நன் கலம்
பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கி,
பணியியர் அத்தை, நின் குடையே முனிவர்
முக் கட் செல்வர் நகர் வலம் செயற்கே!
இறைஞ்சுக, பெரும! நின் சென்னி சிறந்த
20
நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே!
வாடுக, இறைவ! நின் கண்ணி ஒன்னார்
நாடு சுடு கமழ் புகை எறித்தலானே!
செலியர் அத்தை, நின் வெகுளி வால் இழை
மங்கையர் துனித்த வாள் முகத்து எதிரே!
25
ஆங்க, வென்றி எல்லாம் வென்று அகத்து அடக்கிய
தண்டா ஈகைத் தகை மாண் குடுமி!
தண் கதிர் மதியம் போலவும், தெறு சுடர்
ஒண் கதிர் ஞாயிறு போலவும்,
மன்னிய, பெரும! நீ நிலமிசையானே!

திணையும் துறையும் அவை; துறை வாழ்த்தியலும் ஆம்.
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரி கிழார் பாடியது.