அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவ தெவன்.(46)

இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவ னென்பான்
முயல்வாரு ளெல்லாந் தலை.(47)

ஆற்றி னொழுச்கி யறனிழுக்கா வில்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை யுடைத்து. (48)

என்னுங் குறள்களை நோக்குக.

துறவறமும் ஒரு குலத்தார்க்குமட்டும் உரியதன்றி எல்லார்க்கும் பொதுவாம். அவாவும் செருக்கும் அடியோ டொழிந்தாலொழிய ஒருவன் வீட்டையடைய முடியாது.

"பேய்போல் திரிந்து பிணம்போற் கிடந்திட்ட பிச்சை யெல்லாம்
நாய்போ லருந்தி நரிபோ லுழன்றுநன் மங்கையரைத்
தாய்போற் கருதித் தமர்போ லெவருக்குந் தாழ்ச்சிசொல்லிச்
செய்போ லிருப்பர்கண் டீருண்மை ஞானந் தெரிந்தவரே." (பட்டினத்தார் பாடல்)

மனத்துக்கண் மாசில னாத லனைத்தறன்
ஆகுல நீர பிற. (34)

மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க
லுற்றார்க் குடம்பு மிகை.(345)

நீற்றைப் புனைந்தென்ன நீராடப் போயென்ன நீமனமே
மாற்றிப் பிறக்க வகையறிந் தாயில்லை மாமறைநூல்
ஏற்றித் தொழுஉம் எழுகோடி மந்திரம் என்ன கண்டாய்
ஆற்றைக் கடக்கத் துறைதெரி யாம லலைகின்றையே. (பட்டினத்தார் பாடல்)

இச்செய்யுட்களால் , சிறுபிள்ளைபோல் மறுபடியும் பிறந்து செருக்கடங்கி ஆசைவேரறுத்தவரன்றி, செல்வத் தொடர்புள்ள வரும், ஆரவாரமாக ஆடையணி யணிபவரும், தம்மைப் பிறப்பாற் சிறந்தவராகக் கருதுபவரும் மனமாறாது ஆரிய மந்திரங்களை யோதுபவரும், வடமொழியைத் தேவமொழியென்றும் தென்மொழியைக் கீழோர்மொழி(நீசபாஷை) யென்றுங் கூறுபவரும், திருக்குறளை ஓதக்கூடாதென்பவரும், வீட்டுலகையடைவது ஒட்டகம் ஊசியின் காதில் நுழைவதினும் அரிதாயிருக்குமென்று அறிந்துகொள்க.