றும், கூறும் பவுத்தக் கொள்கைகளை ஒப்புகொள்ளாமையால் திருவள்ளுவர் பவுத்தரல்லர்.

உலகிற்கு ஒரு முதல்வன் வேண்டுவதில்லையென்றும், இல்லறத்தினும் துறவறம் சிறந்ததென்றும், மகளிர்க்கு வீடுபேறில்லை யென்றும், மெய்யுர்ணவிற்கு இன்றியமையாத 'சுக்கிலத் தியானம்' என்றும் பரமவூழ்கம் இக்காலத்தில் நிகழ்வதில்லையென்றும், கூறும் சமணக் கொள்கைகளை ஒப்புக் கொள்ளாமையால் திருவள்ளுவர் சைனரல்லர்.

கடவுளில்லையென்றும், மெய்ப்பொருள் இருபத்தைந்தேயென்றும், கூறும் சாங்கியக் கொள்கைகளை ஒப்புக்கொள்ளாமையால் திருவள்ளுவர் சாங்கியரல்லர்.

கடவுள் தோற்றரவு கொள்வாரென்பதையும் உருவ வழிபாட்டையும்  ஒப்புக்கொள்ளாமையால், திருவள்ளுவர் மாலியர் (வைணவர்) அல்லர்.

மெய்பொருள் முப்பத்தாறு என்பதையும் உருவ வழிபாட்டையும் ஆரியச்சார்பையும் ஒப்புக்கொள்ளாமையால், திருவள்ளுவர் சிவனியர் (சைவர்) அல்லர்.

"ஓது மெழுத்தோ டுயிர்க்கலை மூவஞ்சு
மாதி யெழுத்தவை யைம்பத்தோ டொன்றென்பர்." (திருமந்.963)

என்னும் ஒன்றே சிவனிய ஆரியச் சார்பைக் காட்டப் போதிய சான்றாம்.

இற்றைச் சிவனியம் மாலியத்தினும் ஆரியம் மிகுந்துள்ளமை, என் 'தமிழ் மதம்' என்னும் நூலில் விரிவாக விளக்க பெறும்.

இனி, திருவள்ளுவர் எம்மதத்தார்தானெனின், தாயுமானவர் 'அங்கிங்கெனாதபடி' யென்னும் கடவுள் வணக்கச் செய்யுளிற் கூறியுள்ளவாறு , கடவுள் மதத்தினர் என்று கூறிவிடுக்க.

16. வீடுபேற்று விளக்கம்

இல்லறத்தாலும் வீடுபெறலா மென்பது தமிழர் மதமும் திருவள்ளுவர் 
கொள்கையுமாகும்.

வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்.(38).