"அறம்பொரு ளின்பம்வீ டென்னுமந் நான்கின்
திறந்தெரிந்து செப்பிய தேவை- மறந்தேயும்
வள்ளுவன் என்பானோர் பேதை யவர்வரய்ச்சொற்
கொள்ளா ரறிவுடை யார்."

என்று மாமூலர் பெயரிலுள்ள திருவள்ளுவமாலைப்பாவும், திருவள்ளுவரைத் தெய்வப் பிறப்பினரென்றே கொள்ளவேண்டுமென்றும், மறந்தும் மக்கட் பிறப்பினராகக் கொள்ளக்கூடாதென்றும், கூறுகின்றதேயன்றி, அவர் குடி எள்ளளவேனும் இழிவுள்ளதாகக் கருதுவ
தன்று.

காலம் : திருவள்ளுவர் காலம் இன்ன நூற்றாண்டென்று திட்டமாய்த் தெரியாவிடினும், தொல்காப்பியர் காலமான ஏழாம் நூற்றாண்டிற்கும் கடைக்கழக முடிவான மூன்றாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டதென்று கொள்வது, எவ்வகையினும் இழுக்காகாது.

கடைக்கழக முடிவிற்கு முற்பட்ட தென்பதற்குச் சான்றுகள் : -

(1) "பிறர்க்கின்னா முற்பகற் செய்யின் தமக்கின்னா
     பிற்பகற் றாமே வரும்".என்னுங் குறள் (319) 

"   முற்பகற் செய்தான் பிறன்கேடு தன்கேடு
    பிற்பகற் காண்குறூஉம் பெற்றியகாண்"

என்று கி. பி. 2 - ஆம் நூற்றாண்டினதான சிலப்பதிகார அடிகளில் ( 21 : 3-4) அமைந்திருத்தல்.

(2) அதே நூற்றாண்டினதான மணிமேகலையில் (22 : 59-62) 

"தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றவப்
பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்"

என்று, சீத்தலைச் சாத்தனார் சதுக்கப் பூதத்தின் கூற்றாக 55-ஆம் திருக்குறளை யெடுத்துக்கூறி அதன் ஆசிரியரையுங் குறித்தமை.

(3) மணிமேகலைக்கு முந்திய புறநானூற்றில், சோழன் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடிய பாட்டில் (34)

"ஆன்முலை யறுத்த வறனி லோர்க்கு
மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கிற் கழுவாயு முளவென