"புலம்புதரு குரல புறவுப்பெடை பயிரும்" (குறுந். 79)

(உ) மக்களை அழைத்தல்.

"நாட்டிறை பயிருங்காலை முரசம்" (சிலப். 26:52)

பயிர் - பயிரம் - பாயிரம் = அழைப்பு, போருக்கழைப்பு, போருக்கழைக்கும் முகவுரை, முகவுரை.

ஓ. நோ: அகவுதல் = அழைத்தல். அகவு - ஆகவம் = போர்.

"மறுமனத்த னல்லாத மாநலத்த வேந்தன்
உறுமனத்த னாகி யொழுகின் - செறுமனத்தார்
பாயிரங் கூறிப் படைதொக்கா லென்செய்ப
ஆயிரங் காக்கைக்கோர் கல்." (பழமொழி. 249)

'பாயிரங் கூறி என்பதற்கு "வீரத்திற்கு வேண்டும் முகவுரைகள் சொல்லி" என்று பழைய வுரையாசிரியர் பொருள் வரைந்திருப்பதை நோக்குக.

11. நூற்பகுப்பு

திருக்குறள், பால் என்னும் முப்பெரும் பிரிவுகளையும் இயல் என்னும் எண் சிறு பிரிவுகளையும், அதிகாரம் என்னும் 133 உட்சிறு பிரிவுகளையும் உடையது. ஒவ்வோர் அதிகாரமும் பப்பத்துக் குறள்களைக் கொண்டது. ஆக, மொத்தம் 1330 குறளாம். பாயிரமும் ஊழும் நூல் முழுமைக்கும் பொதுவாம்.

அதிகாரக் கணக்கு

பால் இயல் அதிகாரத்தொகை
அறத்துப்பால் பாயிரவியல்
இல்லறவியல்
துறவறவியல்
ஊழியல்
4
20
13
1
பொருட்பால் அரசியல்
உறுப்பியல்
25
45
இன்பத்துப்பால் களவியல்
கற்பியல்
7
18
____
மொத்தம் 133
____

உறுப்பியல் அமைச்சு (10), நாடு (1), அரண் (1), பொருள் (கூழ், 1), படை (2), நட்பு (17), குடி (13) என ஏழு பகுதிகளையும் 45 அதிகாரங்களையும் உடையது. நட்பிற் பகையும் (14) அடங்கியுள்ளது.