"கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து
நல்லறி வாள ரிடைப்புக்கு- மெல்ல
இருப்பினும் நாயிருந் தற்றே யிராஅது
உரைப்பி னும் நாய்குரைத் தற்று." (நாலடி.
254)
521.
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே யுள.
'பற்றற்ற கண்ணும்' என்னும் தொடருக்கு "ஒருவன் செல்வந் தொலைந்து வறியனாய வழியும்" என்று
பொருள்கூறி, "சிறப்பும்மை, வறியனாயவழிப்
பாராட்டப்படாமை விளக்கிநின்றது." என்றும்,"பிறரெல்லாம்
அவன் பற்றற்ற பொழுதே தாமும் அவனோடு பற்றறுவராகலின்,
ஏகாரந் தேற்றத்தின்கண் வந்தது." என்றும் சிறப்புரைத்தார்.பரிமேலழகர்.
சிறப்பும்மையில் எச்சக் கருத்துங் கலந்திருப்பதால், வறியனாய வழியும் என்பது இழிவு சிறப்பும்மையாகுமேனும்,"சுற்றத்தார் மாட்டே" என்பதிலுள்ள ஏகாரம் சுற்றத்தாரை வேறுபடப் பிரித்து வரையறுத்தலால்
பிரிநிலையேயாம்.
2.
"அகரமுதல வெழுத்தெல்லாம்"
உலகில் முதன்முதல் தோன்றித் திருந்தி வளர்ச்சியுற்ற இலக்கிய மொழி தமிழே.
"எண்பெயர் முறைபிறப் புருவ மாத்திரை
முதலீ றிடைநிலை போலி யென்றா
பதம்புணர் பெனப்பன் னிருபாற் றதுவே."
என்று நன்னூலார் (2) கூறியவாறு, இன்றும் பன்னிருவகை எழுத்திலக்கணங்களைக் கொண்டுள்ளது தமிழே.பதம் என்னும் வடசொல்லாற் குறித்தது கிளவியை. குறுங்கணக்கின் எழுத்து முறை போன்றே, உயிர்மெய்க்குத் தனிவடிவு கொண்ட நெடுங்கணக்கும் முதன்முதல் அமைந்தது தமிழே. அதைப் பின்பற்றியே சமற்கிருதத்திலும் பிற
இந்தியமொழிகளிலும் வண்ணமாலைகள் எழுந்தன. திருவள்ளுவர்
காலத்தில் தமிழகத்துத் தமிழைப் பின்பற்றித் தோன்றியிருந்த
பிறமொழியெழுத்து வடமொழிக்கிரந்தமே, இங்ஙனம்
அகரத்தை முதலாகக் கொண்ட வண்ணமாலைகளே அக்காலத்து
தமிழகத்து வழங்கினமையாலும், அங்காத்தலால் மட்டும்
தோன்றும் அகரம் அங்காத்தலொடு பிற முயற்சியும் கொண்ட பிறவெழுத்திற்கெல்லாம் மூலமாயிருத்தலாலும் 'அகர முதல வெழுத்தெல்லாம்
' என்றார் திருவள்ளுவர். அங்காத்தல் வாய்திறத்தல்.
|