அரண்; உரம்-அரம்-அரண்=வலிய காப்பு, காப்பான கோட்டை, காப்பான இடம். ஒ.நோ; பரம் -பரண்.

அரண்-அரணம்-சரண(வ.), சரண என்னும் வடசொற்குச் சார்தல் என்று பொருள்படும் சரி என்னுஞ் சொல்லை மூலமாகக் காட்டுவர். அது சார் என்னுந் தென்சொல்லின் திரிபே.

அவம்: அவிதல்=வேதல், அழிதல், கெடுதல். அவி-அவம்=கேடு, வீண். அவம்-அவ-அப(வ.)

அவை: அமைதல்=நெருங்குதல், கூடுதல். அமை=கூட்டம், அம்பலம். அமை-அவை. ஒ. நோ: அம்மை-அவ்வை, குமி-குவி.

அவை-சவை, ஒ.நோ: அமையும்-சமையம்,இளை-சிளை, உதை-சுதை(உதைக்கும் ஆவு),எட்டி-செட்டி. அவை-அவையம். 'அம்' ஒரு பெருமைப் பொருட் பின்னொட்டு. எ-டு. நிலை-நிலையம்,கம்பு-கம்பம்,சவை-சபா(வ.)

ஆணி; ஆழ்-ஆழி-ஆணி=ஆழ்ந்திறங்கும் முட்போன்ற கூர்ங்கருவி. ஆணிபோல் ஆழ்ந்தூன்றும் வேரை ஆணிவேர் என்றும் சுவரில் ஆணி பதிதலை ஆணியிறங்குதல் என்றும், கூறுவது காண்க. ழ-ண, போலி. ஒ. நோ: தழல்-தணல், நிழல்-நிணல் ஆணி-ஆணி(வ.)

ஆயம்; (1) தாய்-தாயம்=தாய்வழியுரிமை. முதற்காலத்திற் குடும்பத் தலைமை தாங்கியது தாயே. தாயம்-ஆயம்=உரிமை தாயம்-தாய(வ.).

ஆயம்; (2) வா-ஆ-ஆயம்=வருவாய், வரி, கட்டணம். ஓடிவா என்பது கொச்சை வழக்கில் ஒடியா என்று சொல்லப்படுதல் காண்க. வா என்னுஞ்சொல்லே ஆவ் என்று முன்பின்னாக முறைமாறி இந்தியில் வழங்கும். ஆயம்-ஆய(வ.)

ஆயிரம்: அயிர்=நுண்மணல், அயிர்-அயிரம்-ஆயிரம்.
ஆற்றுமணலும் கடற்கரை மணலும் ஏராளமாயிருப்பதால் மணற்பெயர் ஒரு பெருந்தொகைப் பெயராயிற்று. ஒ.நோ: நூறு=நீறு, தூள், நூறென்னும் எண்.

ஆயிரம்-ஆயிரம்(ம.)-ஆயிரெ(கு.) ஹசார் (இ.)-ஸஹஸ்ர (வ.). வடசொல் வடிவத்தில் 'ஸ' என்பது முன்னொட்டு.

இமை: இமை-நிமை-நிமி (வ.)