3. இத்திருவள்ளுவமாலைப் பாடகராகக் குறிக்கப்பட்டவருட் பலர் திருவள்ளுவர் காலத்தவராக இருத்தல்.

4. திருக்குறள் ஆரியவேத வழிப்பட்டதாகப் பல பாட்டுக்கள் கூறுதல்.

5. பாக்களின் நடை பெரும்பாலும் பிற்காலத்த தாக விருத்தல்.

6. உருத்திரசர்மன் என்னும் இயற்பெயர் உயர்வுப்பன்மை வடிவிற் குறிக்கப்பட்டிருத்தல்.

7. நல்கூர்வேள்வியார் பெயரிலுள்ள பாவில் மாதாநுபங்கி என்னும் ஒரு பொருளற்ற வடசொல் ஆளப்பட்டிருத்தல்.

8. சில பாக்களில் திருவள்ளுவர் கருத்திற்கு மாறாகப் பிராமணரை அந்தணரென்று குறித்திருத்தல்.

உடம்பிலி (அசரீரி)

1. திருத்தகு தெய்வத் திருவள் ளுவரோ
டுருத்தகு நற்பலகை யொக்க-விருக்க
வுருத்திர சன்ம ரெனவுரைத்து வானி
லொருக்கவோ வென்றதோர் சொல்.

(பொழிப்புரை) உருத்திரசர்மன் கழகப் பலகையிடத்துத் திருவள்ளுவருடன் ஒக்கவிருக்க வென்று வானில் ஓர் உரையெழுந்த்து.

நாமகள்

2.நாடா முதனான் மறைநான் முகனாவிற் 
பாடா விடைப்பா ரதம்பகர்ந்தேன்--கூடாரை
யெள்ளிய வென்றி யிலங்கிலைவேன் மாறபின்
வள்ளுவன் வாயதென் வாக்கு.

(பொ--ரை.) பாண்டிய வேந்தே!நான் படைப்புக் காலத்தில் நான்முகன் நாவிலிருந்து நான்மறை பாடினேன்; இடைக்காலத்திற் பாரதம் பாடினேன்;இன்று வள்ளுவன் வாயது என் பாட்டு.

இறையனார்

3.என்றும் புலரா தியாணர்நாட் செல்லுகினு 
நின்றலர்ந்து தேன்பிலிற்று நீர்மையதாய்க்--குன்றாத 
செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போன்
மன்புலவன் வள்ளுவன் வாய்ச்சொல்.