பிறங்கொளிமா லைக்கும் பெயர்மாலை மற்றுங்
கறங்கிருண்மா லைக்கும் பெயர்.

(பொ--ரை.) திருவள்ளுவரையும் பிற புலவரையும் புலவரென்று சமமாகச் சொல்லுதல், முழுமதி மாலையையும் காருவா அமாவாசை மாலையையும் மாலையென்றே ஒரே சொல்லாற் குறிப்பது போலும்.

மதுரை யறுவை வாணிகன் இளவேட்டனார்

35.இன்பமுந் துன்பமு மென்னு மிவையிரண்டு
மன்பதைக் கெல்லா மனமகிழ- வன்பொழியா
துள்ளி யுணர வுரைத்தாரே யோதுசீர்
வள்ளுவர் வாயுறை வாழ்த்து.

(பொ--ரை.) மக்களெல்லாரும் தமக்கு வரும் இன்பதுன்பக்கரணியங்களை யறிந்து துன்பத்தினின்று தப்பி யின்புறும்பொருட்டு, திருவள்ளுவர் திருக்குறளை வாயுறை வாழ்த்தாகப்பாடினார்.

வாயுறை வாழ்த்தாவது, முன்பு வெறுப்பை விளைப்பினும் பின்பு நலம் பயக்கும் நன் மருந்துபோற் பயன்படும் அறிவுரை வாயுறுத்தும் மருந்து.

கவிசாகரப் பெருந்தேவனார்

36.பூவிற்குத் தாமரையே பொன்னுக்குச் சாம்புனத
மாவிற் கருமுனியா யானைக்- கமரரும்பல்
தேவிற் றிருமா லெனச்சிறந்த தென்பவே
பாவிற்கு வள்ளுவர்வெண் பா.

(பொ--ரை.) பூவிற்குத் தாமரையும், பொன்னிற்கு நாவற் சாறமும், ஆவிற்குக் காமதேனுவும் யானைக்கு ஐராவதமும், தேவிற்குத் திருமாலும், நூலிற்குத் திருக்குறளும் சிறந்தனவாம்.

மதுரைப் பெருமருதனார்

37.அறமுப்பத் தெட்டுப் பொருளெழுப தின்பத்
திறமிருபத் தைந்தாற் றெளிய - முறைமையால்
வேத விழுப்பொருளை வெண்குறளால் வள்ளுவனா
ரோதவழுக் கற்ற துலகு.

(பொ--ரை.) திருவள்ளுவர், அறத்தை முப்பத்தெட் டதிகாரங்களாகவும் பொருளை எழுபததிகாரங்களாகவும் இன்பத்தை இருபத்தைந் ததிகாரங்களாகவும் வகுத்து, வேதப் பொருளைக் குறள் வெண்பாவாற் கோவைபடக் கூறியதால், உலகம் தீயொழுக்கத்தினின்றும் தீர்ந்தது.