என்னும் வெண்பாவா னறிக. இதில் ‘நால்' என்பதனை
‘ஐந்திணை' என்பதன் முன்னுங் கூட்டி
நாலைந்திணையெனக் கொள்ள வேண்டும். சிலர்
இன்னிலையை விடுத்துக் கைந்நிலையை ஒன்றாக்குவர்.
மற்றுஞ் சிலர் ஐந்திணையை ஐந்து நூலெனக்கொண்டு
இன்னிலை, கைந்நிலை இரண்டனையும் ஒழித்திடுவர்.
அவர், ‘திணைமாலை' என்பதொரு நூல் பழைய வுரைகளாற்
கருதப்படுவ துண்டாகலின் அதுவே ஐந்திணையுட் பிறிதொன்றாகல்
வேண்டுமென்பர். முற்குறித்த வெண்பாவில் ‘ஐந்தொகை'
‘இன்னிலைய' ‘மெய்ந்நிலைய' ‘கைந்நிலையோடாம்'
‘நன்னிலையவாம்' என்றிவ்வாறெல்லாம் பாடவேற்றுமையும்
காட்டுவர். கீழ்க்கணக்குகள் பதினெட்டேயாதல் வேண்டுமென்னுங்
கொள்கையால் இவ்விடர்ப்பாடுகள் விளைகின்றன.
இனி,
இன்னா நாற்பது என்னும் இந்நூலையியற்றினார் நல்லிசைப் புலவராகிய கபில
ரென்பார். இவரது காலம் கி. பி. 50 முதல் 125 வரை
ஆதல் வேண்டும். இவர் தமிழ்நாட்டு அந்தணருள்
ஒருவர் இவர் அந்தணரென்பது ‘புலனழுக்கற்ற
அந்தணாளன்' (புறம். 126) என மாறோக்கத்து
நப்பசலையார் இவரைப் புகழ்ந்து
கூறியிருத்தலானும், இவரே பாரிமகளிரை விச்சிக்கோன்,
இருங்கோவேன் என்பவர்களிடம் கொண்டு சென்று,
அவர்களை மணந்து கொள்ளுமாறு வேண்டியபொழுது, ‘யானே,
பரிசிலன் மன்னு மந்தணன்' (புறம். 200) என்றும்,
‘அந்தணன் புலவன் கொண்டுவந்தனனே' (புறம். 201)
என்றும் தம்மைக் கூறிக்கொண்டிருத்தலானும்
பெறப்படுவதாகும். இவரது சமயம் சைவமே. இவர்
இந்நூற் கடவுள் வாழ்த்தில் சிவபெருமானையடுத்து
வேறு கடவுளரையுங் கூறியிருப்பது இவர்க்கு ஏனைக்
கடவுளர்பால் வெறுப்பின்றென்பது
மாத்திரையேயன்றி விருப்புண் டென்பதனையும்
புலப்படுத்தாநிற்கும் சமயங்களின் கொள்கைகளும்,
சமயநெறி நிற்போர் நோக்கங்களும் அவ்வக்கால
இயல்புக்கும் ஏனைச் சார்புகளுக்கும் ஏற்பப்
பிழையின்றியோ பிழையாகவோ வேறுபாடெய்தி
வருதல் உண்மைகாணும் விருப்புடன் நுணுகி ஆராய்ச்சி
செய்வார்க்குப் புலனாகும்.
இனி,
இவரியற்றிய பாட்டுகள் சங்கத்தார் தொகுத்து எட்டுத்தொகை,
பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு என்னும்
|