15 பாத்திரம்கொண்டு பிச்சை புக்க காதை

 
   

[ மணிமேகலை பாத்திரம்கொண்டு பிச்சைக்குப்

 

பெருந்தெருப்போய பாட்டு ]

 
 
இன்னும் கேளாய் இளங்கொடி மாதே
அந்நாள் அவனை ஓம்பிய நல்ஆத்
தண்என் சாவகத் தவள மால்வரை
மண்முகன் என்னும் மாமுனி இடவயின்
5
பொன்னின் கோட்டது பொன்குளம்பு உடையது
தன்நலம் பிறர்தொழத் தான்சென்று எய்தி
ஈனா முன்னம் இன்உயிர்க்கு எல்லாம்
தான்முலை சுரந்து தன்பால் ஊட்டலும்
மூன்று காலமும் தோன்றநன்கு உணர்ந்த
10
ஆன்ற முனிவன் அதன்வயிற் றகத்து
மழைவளம் சுரப்பவும் மன்உயிர் ஓம்பவும்
உயிர்கா வலன்வந்து ஒருவன் தோன்றும்
குடர்த்தொடர் மாலை பூண்பான் அல்லன்
அடர்ப்பொன் முட்டை அகவையி னான்எனப்,
15
பிணிநோய் இன்றியும் பிறந்துஅறம் செய்ய
மணிபல் லவத்திடை மன்உயிர் நீத்தோன்
தன்காத்து அளித்த தகைஆ அதனை
ஒற்கா உள்ளத்து ஒழியான் ஆதலின்
ஆங்குஅவ் ஆவயிற்று அமரர்கணம் உவப்பத்
20
தீங்கனி நாவல் ஓங்கும்இத் தீவினுக்கு
ஒருதான் ஆகி உலகுதொழத் தோன்றினன்.
பெரியோன் பிறந்த பெற்றியைக் கேள்நீ:
இருதுஇள வேனிலில் எரிகதிர் இடபத்து
ஒருபதின் மேலும் ஒருமூன்று சென்றபின்
25
மீனத்து இடைநிலை மீனத்து அகவையின்
போதித் தலைவனொடு பொருந்திய போழ்தத்து
மண்ணகம் எல்லாம் மாரி இன்றியும்
புண்ணிய நல்நீர் போதொடு சொரிந்தது,
போதி மாதவன் பூமியில் தோன்றும்
30
காலம் அன்றியும் கண்டன சிறப்புஎனச்
சக்கர வாளக் கோட்டம் வாழும்
மிக்க மாதவர் விரும்பினர் வியந்து
கந்துடை நெடுநிலைக் கடவுள் எழுதிய
அந்தில் பாவை அருளு மாயிடின்
35
அறிகுவம் என்றே செறிஇருள் சேறலும்,
மணிபல் லவத்திடை மன்உயிர் நீத்தோன்
தணியா உயிர்உயச் சாவகத்து உதித்தனன்
ஆங்குஅவன் தன்திறம் அறவணன் அறியும்என்று
ஈங்குஎன் நாவை வருத்தியது இதுகேள்:
40
மண்ஆள் வேந்தன் மண்முகன் என்னும்
புண்ணிய முதல்வன் திருந்தடி வணங்கி
மக்களை இல்லேன் மாதவன் அருளால்
பெற்றேன் புதல்வனை என்றுஅவன் வளர்ப்ப
அரைசுஆள் செல்வம் அவன்பால் உண்மையின்
45
நிரைதார் வேந்தன் ஆயினன் அவன்தான்.
  துறக்க வேந்தன் துய்ப்புஇலன் கொல்லோ
அறக்கோல் வேந்தன் அருள்இலன் கொல்லோ
சுரந்து காவிரி புரந்துநீர் பரக்கவும்
நலத்தகை இன்றி நல்உயிர்க்கு எல்லாம்
50
அலத்தல் காலை ஆகியது ஆயிழை
வெண்திரை தந்த அமுதை வானோர்
உண்டுஒழி மிச்சிலை ஒழித்துவைத் தாங்கு
வறன்ஓடு உலகின் வான்துயர் கெடுக்கும்
அறன்ஓடு ஒழித்தல் ஆயிழை தகாதுஎன,
55
மாதவன் உரைத்தலும் மணிமே கலைதான்
தாயர் தம்மொடு தாழ்ந்துபல ஏத்திக்
கைக்கொண்டு எடுத்த கடவுள் கடிஞையொடு
பிக்குணிக் கோலத்துப் பெருந்தெரு அடைதலும்,
ஒலித்துஒருங்கு ஈண்டிய ஊர்க்குறு மாக்களும்
60
மெலித்துஉகு நெஞ்சின் விடரும் தூர்த்தரும்
கொடிக்கோ சம்பிக் கோமகன் ஆகிய
வடித்தேர்த் தானை வத்தவன் தன்னை
வஞ்சம் செய்துழி வான்தளை விடீஇய
உஞ்சையில் தோன்றிய ஊகி அந்தணன்
65
உருவுக்கு ஒவ்வா உறுநோய் கண்டு
பரிவுஉறு மாக்களில் தாம்பரிவு எய்தி,
உதய குமரன் உளம்கொண்டு ஒளித்த
மதுமலர்க் குழலாள் வந்து தோன்றிப்
பிச்சைப் பாத்திரம் கையின்ஏந் தியது
70
திப்பியம் என்றே சிந்தைநோய் கூர,
மணமனை மறுகில் மாதவி ஈன்ற
அணிமலர்ப் பூங்கொம்பு அகம்மலி உவகையின்
பத்தினி பெண்டிர் பண்புடன் இடூஉம்
பிச்சை ஏற்றல் பெருந்தகவு உடைத்துஎன,
75
குளன்அணி தாமரைக் கொழுமலர் நாப்பண்
ஒருதனி ஓங்கிய திருமலர் போன்று
வான்தரு கற்பின் மனைஉறை மகளிரில்
தான்தனி ஓங்கிய தகைமையள் அன்றோ
ஆதிரை நல்லாள் அவள்மனை இம்மனை
80
நீபுகல் வேண்டும் நேர்இழை என்றனள்
வடதிசை விஞ்சை மாநகர்த் தோன்றித்
தென்திசைப் பொதியில்ஓர் சிற்றியாற்று அடைகரை
மாதவன் தன்னால் வல்வினை உருப்பச்
சாபம் பட்டுத் தனித்துயர் உறூஉம்
85
வீவில் வெம்பசி வேட்கையொடு திரிதரும்
காயசண் டிகைஎனும் காரிகை தான்என்.
 

பாத்திரம்கொண்டு பிச்சை புக்க காதை முற்றிற்று.

 
மேல்