முன்னுரை
 

இனிப் பிரச்சோதன மன்னன் தன் மக்கள் கலை பயின்று நிரம்பினர் என்று தன் தேவியர்க்குக் கூறியபொழுது,

''திருநுதல் ஆயத்துத் தேவியர் நடுவண்
பெற்ற நாளினும் பெரும்பூட் புதல்வரைக்
கற்ற நாள்வயிற் கலிசிறந் துரைஇ
மகிழ்ச்சிக் கிளவி மழையென இசைப்ப''

(1-37: 78-81)

எனவரும் புலவர்மொழி,

''ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்''

(குறள் : 61)

என்னும் திருக்குறளின் விளக்கமே யன்றோ?


   இனிக்

''கவற்சியிற் கையறல் நீக்கி முயற்சியில்
குண்டுதுறை இடுமணல் கோடுற அழுந்திய
பண்டிதுறை யேற்றும் பகட்டினை போல
இருவேம் இவ்விடர் நீக்குதற் கியைந்தனம்''

(1 - 53 : 52 - 55)

எனவருமிது,

''மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பா டுடைத்து''

(குறள் : 624)

எனவரும் திருக்குறள் நினைவானெழுந்ததாம். இதோ,

''ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்''

(குறள் : 763)

என்னுமித் திருக்குறளை,

''மத்துறு கடலிற் றத்துறு நெஞ்சினர்
பைவிரி நாகத் தைவாய்ப் பிறந்த
ஒலிப்புயிர் பெற்ற எலிக்கணம் போல
ஒழிந்தோர் ஒழிய''

(1. 56 : 272 - 275)

என்னுமி தன்கண் காண்மின்.