பதிப்புரை


    உலக மொழிகள் பலவற்றுள்ளும் உயர்தனிச் செம்மொழி எனப் பிற நாட்டினரும் வியந்து பேசப்படும் மொழி நமது தாய் மொழியாகிய தமிழ் மொழியே. இதன் பழைமையும் பெருமையும்  அருமையும் நம்மொழியிலமைந்த இலக்கணம் இலக்கியமாகிய நூல்கள் வாயிலாக நாம் அறிகின்றோம். எத்துணையோ மொழிகள் தோன்றித்தோன்றி மறைந்த உலகில் தோன்றியகாலமுதல் இன்றுவரை நின்றுநிலவுகின்றது இம்மொழி  என்றால் இதன் தெய்வத் தன்மையைச் 

செப்பவும் வேண்டுமோ?

    இங்ஙனம் பல்லாண்டு நிலைத்து நிற்பதற்குக் காரணம் தொல்காப்பியம் முதலிய இலக்கண வரம்புகளேயாம். பத்துப் பாட்டு, எட்டுத்தொகை முதலிய இலக்கியங்கள் தமிழ்நாட்டு நாகரிகத்தினை நன்கு விளக்குகின்றன. சங்கமருவிய நூல்கள் என இவற்றைச் சாற்றுவர் அறிஞர். நம் நாட்டில் தோன்றிய நூல்களிற் பல மறைந்தன. நிற்கும் நூல்களையே நாம் கற்கும் நூல்களாகப் போற்றிவர வேண்டுவது கடமையாம்.)

        பெருங்கதையெனப் பெயர் பெற்ற 'கொங்கு வேண்மாக்கதை' என்பது சங்ககாலத்தை யொட்டிய நூங்களுள் ஒன்றாம். இந்நூலின் பழைமையும் பெருமையும் இதன் உரையாசிரியர் தம் முகவுரையில் விளக்கியுள்ளனர்; ஆண்டுக் காண்க. இக்கதை வடநாட்டினதாயினும் தமிழ் மொழிக்கண் முதலில் தோன்றியது இந்நூலேயாம். இது முதலும் முடிவும் எவ்வாறோ மறைந்து இடைக்கண் உள்ள செய்யுட்களுடன் கொண்டு வெளிப்பட்டது. இத்துணை வெளிப்பட்டது டாக்டர். உ. வே. சாமிநாத ஐயரவர்கள் ஏடு தேடிய பெருமுயற்சியால் என்பது கூறாமலே விளங்கும். அவர்கட்டுத் தமிழ்நாட்டார் நன்றியுரித்தாகுக.