iV

(5) மணிமான்வதை என்ற ஐந்துசருக்கங்கட்கும் முன்னரே ஸ்ரீ - உ. வே. வை. மு. சடகோபராமாநுஜாசார்யஸ்வாமிகள் உரை கண்டிருந்தனர். அவர்கள் உரைகண்டிருந்தவற்றுள், புட்பயாத்திரைச்சருக்கத்தில் முதல் அறுபதுபாடல்களின் உரைதவிர மற்றைப் பாடல்களின் உரைகளே எனக்குக் கிடைத்தன. அவற்றை வைத்துக் கொண்டு, உரைகிடைக்காதனவும் இல்லாதனவுமான பகுதிகட்கு உரையெழுதியும், உரைகிடைத்தபகுதிகளைப் பார்வையிட்டும் சங்கப்பதிப்புப்பாரதத்தோடு ஒத்திட்டுத் தக்கபாடங்களை வைத்துக்கொண்டும் முதற்பதிப்பு வெளியிடலாயிற்று: முன்னிலும் சிறிது சீர்திருத்தம்பெற இவ்விரண்டாம் பதிப்பு வெளியிடப்படுகிறது.

இந்தவில்லிபுத்தூரார்பாரதத்துக்கு முதனூல் பாலபாரதமா யிருக்கலாமென்று சிலர் கருதுகின்றனர். அதுகுறித்துச் சிறிது ஆராய்வேன்:

பாலபாரதம், இருபதுசருக்கங்களையுடையது. அவற்றுள் முதல் ஆறுசருக்கங்கள், ஆதிபருவத்தின் சரிதையைக் கூறுவன: ஏதாவது சருக்கம், சபாபருவத்துச் சரிதையைக் கூறுவது. எட்டு ஒன்பதாஞ் சருக்கங்கள், ஆரணிய பருவத்தின் சரிதையைக் கூறுவன: பத்துப் பதினோராஞ் சருக்கங்கள், விராடபருவத்துச்சரிதையைக்கூறுவன: பன்னிரண்டு பதின்மூன்றாஞ் சருக்கங்கள், உத்தியோக பருவசரிதையைக் கூறுவன. பதினான்காஞ் சருக்கம், வீட்டும பருவ சரிதைகூறுவது: பதினைந்து பதினாறாஞ்சருக்கங்கள் துரோண பருவசரிதைகூறுவன: பதினேழாஞ்சருக்கம், கர்ணபருவசரிதை கூறுவது. பதினெட்டாஞ்சருக்கம், சல்லியசௌப்திக பருவசரிதை கூறுவதாகும்: பத்தொன்பதாஞ்சருக்கம், ஸ்த்ரீபருவந் தொடங்கி ஆஸ்வமேதிகபருவம் வரையுள்ள சரிதையையும், இருபதாஞ்சருக்கம் அதற்குமேல் சுவர்க்காரோகணபருவம் வரையிலுள்ள சரிதையையும் கூறுவனவாகும்.

ஆதிபருவத்துக்கு உரைகண்டு முன்னர்வெளியிட்டபோது முற்றிலும் பாலபாரதத்தோடு அப்பகுதியை ஒப்பிட்டுப்பார்த்து ஒற்றுமைவேற்றுமைகளை அங்குக் காட்டியுள்ளேன். பாரதகதையைச் சுருக்கமாகக் கூறக்கருதிய வில்லிபுத்தூரார் ஆதிபருவக்கதையைப் பாலபாரதம் முதலாறுசருக்கங்களில் தம் விருப்பின்படி சுருங்கக் கூறுவது கண்டு பெரும்பாலும் அந்தப்பகுதியை அந்தப்பால பாரதத்தை யொட்டிப் பாடினார்: மேற்பகுதிகள் தம்கருத்துப்படி பாலபாரதத்தில் அமையாமையால் அவற்றை அடியொற்றிப்பாடாமல் சுதந்திரமாகப் பாரதத்தைச் சுருக்கிப் பாடினரா யிருக்க வேண்டும். அங்ஙனம்பாடுமிடத்து இரண்டோரிடத்துப் பாலபாரதக் கருத்து வருகின்றது: அவ்வளவே தவிர, ஆதிபருவத்தைப் போல் அவ்வளவு ஒட்டி வரவில்லை. ஒருகால் வில்லிபுத்தூரார் பாடும்போது பாலபாரதத்தில் முதலாறுசருக்கங்கள் தவிர, மற்றைப்பகுதிகள் இவ்வில்லிபுத்தூரார்க்குக் கிடைக்காமலிருந்தாலும் இருந்திருக்கலாம். எப்படியிருந்தாலும், ஆதிபருவம்தவிர, வில்லிபுத்தூரார்