- 224 -
196.  அசைய தாகி யரும்பட ரொன்றிலா
  இசையி லாதன யானுற வித்தலைத்
  தசைதி னாளர்கள் தங்களி னென்னையிவ்
  வசையின மன்னவன் வானுல குய்க்குமோ.

(இ-ள்.) இத்தலை - இவ்விடத்தில், யான் - யசோதரனாகிய யான், அசை அது ஆகி - ஆடாகி, இசையிலாதன - பொருத்தமில்லாதனவாகிய, ஒன்று இலா அரும் படர் - பல அரிய துன்பங்களை, உற - அடைந்திருக்க,  வசையில் இ மன்னவன் - நிந்தனையில்லாத இந்த (யசோமதி) அரசன், தசை தின் ஆளர்தங்களின் - இறைச்சியுண்பவர்களால், என்னை - --, வானுலகு உய்க்குமோ - தேவருலகத்திற்கு விடுப்பானோ! (எ-று.)

மாம்ஸமுண்ணு மிவர்களால் யான் தேவருலகெய்த முடியுமா!  என்று யசோதரன் இகழ்ந்த வருந்தினானென்க.

அசை - அஜம் என்னும் வட சொல்லின் திரிபு.  அரும் படர் - பொறுத்தற்கரிய துன்பம்.  இசையிலாதன - புகழ் இல்லாதன எனவுமாம். வசையில் மன்னவன் என்பது வசையுடையவன் என்பதைக் குறிப்பால் உணர்த்திற்று. உய்க்குமோ என்பதில், ஓகாராம், எதிர் மறைப் பொருளைத்தருகின்றது.                     (42)

197.  பேதை மாதர்பெய் நஞ்சினி லெஞ்சியிம்
  மேதி னிப்பதி யாதல் விடுத்தபின்
  யாது செய்தன னோவினை யேனிடை
  யாது செய்குவ னோவுண ரேனினி.

(இ-ள்.) (யான்), பேதை மாதர் பெய் - பேதை-யாய அமிர்தமதி கலந்து உண்பித்த, நஞ்சினில் எஞ்சி-விஷத்தாலிறந்து, இம் மேதினிப் பதி ஆதல் விடுத்த பின்-இவ்வுலகின் அரசனான தன்மை விடுத்த பிறகு, வினையேன்-தீவினையாளனாகிய யான், இடை - இடைப்பட்ட காலத்தில், யாது செய்தனனோ - எத்தகைய தீவினை செய்தேனோ! இனி யாது செய்குவனோ-இனி என்ன தீவினைகளைச் செய்வேனோ! உணரேன் - அறிகிலேன். (எ-று.)