துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமும் வேண்டிநிற்பதே ஆருயிர்களின்
அகலா
இயல்பாகும். அவ்வின்பத்தின் பொருட்டு உணவுண்கின்றன. ஆணும் பெண்ணுமாய்
மருவிவாழ்கின்றன. ஆறறிவு நிரம்புவதற்கு வாயிலாகிய கருவிகளோடமைந்த உடம்பு
மக்களுடம்பு. மக்களுடம் பிற் புகுந்த மாண்புடை உயிர்களெல்லாம் இன்பத்திற்குத்
துணையாகிய பொருளினையும், அவ்வின்பத்தினையும் நெறிமுறையாகத் துய்க்கவும்
தேடவும் அறவுணர்வு வேண்டப் படுவதாயிற்று. இம்முறையான் செந்தமிழ் முதனூல்கள்
'இன்பமும், பொருளும், அறனும்' என்று முப்பாலா யோதுவவாயின. இம்மூன்றும்
முறையே அன்பு, ஆற்றல், அறிவு என்னும் முப்பண்புகளின் முதன்மை அடிப்படையில்
நிகழ்வன. இனி இவற்றின் அடிப்படையில் வீடும் பேறும் என்னும் இரண்டு நிகழ்வன.
வீடு என்பது முனைப்பற்று ஆண்டானுக்கு அடிமைபூண்டு அகலாநினைவுடன் ஒழுகுவது.
பேறு என்பது முனைவன் திருவடிக் கலப்பால் தன்னைமறந்து தாடலைபோற் புணர்ந்து
நீடின்பம் துய்த்து நிற்பது.
இம்முறைகளைத் தெளிவா யுணர்த்தி மக்களை நன்னெறிக் குய்ப்பது
இலக்கியங்களேயாகும். இலக்கியங்கள் பெரும்பாலும் சமயத் தொடர்புடை யனவே.
எனினும் அவற்றைப் பிறநெறியினரும் போற்றிப் புரப்பது மொழித்தொடர்பு
ஒன்றுநோக்கியேயாம். நூலினியல்பால் பாகுபடுக்கப் படுவதும் வேண்டத் தக்க
தொன்றேயாகும்; இலக்கணநூல்களுள் தொல்காப்பியம் இணையின்றி நிற்பதும்,
நீதிநூல்களுள் திருக்குறள் இணையின்றி நிற்பதும் எடுத்துக் காட்டாகும்.
இலக்கியங்கள் கடவுளுண்மையும், கடவுள் வழிபாடும், வாழ்க்கை முறையும்,
பொருள் ஈட்டலும், ஈதலும், துய்த்தலும், துணைநிற்றலும், காத்தலும், காத்தல்
குறையுறநேரின் பொருதலும் ஆகிய புறப்பொருளும், வாழ்க்கை முறையில் ஆணும்
பெண்ணும் வாழ்க்கைத் துணைவராய் நின்று முறையே புறத்தும் அகத்தும் புரிவன
புரிந்து மக்கட்பேறெய்தி எவ்வுயிரும் வாழத்துணை நின்று வாழ்ந்து செவ்வியராய்த்
திருவடிசேர்ந்து திளைக்கும் அகப்பொருளும் தெளிவுற ஓதுகின்றன. அம்முறையில்
முற்றுமாய்க்கிடைத்துச் |